தேவாங்கை பாதுகாக்க சரணாலயம் அமைக்கக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Sep 24, 2021, 7:48 AM IST

தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

அரியவகை வன விலங்கான தேவாங்கைப் பாதுகாக்க திண்டுக்கல், திருச்சி, கரூர் பகுதிகளில் சரணாலயம் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "தமிழ்நாட்டில் அரியவகை விலங்கான தேவாங்கு கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் குறைவாக இருப்பதால் தேவாங்கு வனப்பகுதியில் வாழ முடியாமல் அழிந்துவரும் சூழல் உருவாகியுள்ளது. வன விலங்குகளைப் பாதுகாக்க வனத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி, வன விலங்கான தேவாங்கைப் பாதுகாக்க வேண்டும்.

தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாட்டில் தேவாங்கு அதிகம் உள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்க கோரி உயர் அலுவலர்ககளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை இல்லை.

எனவே அரிய வகை வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தேவாங்கு அதிகமுள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

கணக்கெடுப்பு நடைபெறுகிறது

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் மாவட்ட வன அலுவலர் தரப்பில், கடவூர், அய்யலூர் பகுதிகளில் உள்ள தேவாங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.