கிராம பஞ்சாயத்தை பொது பிரிவினருக்கு அறிவிக்கக் கோரி வழக்கு

author img

By

Published : Sep 23, 2021, 7:35 AM IST

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலை கிராம பஞ்சாயத்தை பொது பிரிவினருக்காக அறிவிக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பழனிவேலு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரசமலை கிராம பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3,226 வாக்காளர்களில் 699 பேர் எஸ்சி எஸ்டி மற்றும் ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசின் அரசாணையின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிகள், தனித்தொகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில் அரசமலை கிராம பஞ்சாயத்து, தனி பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பிலும், அரசமலை ஊராட்சி தனிப்பிரிவினருக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விதிகளுக்கு எதிராக அரசமலை ஊராட்சி தனிப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.

ஆகவே, அரசமலை கிராம பஞ்சாயத்தை பொதுப்பிரிவினருக்காக அறிவிக்கவும், அனைத்துப்பிரிவு மக்களிடம் இருந்தும் வேட்பு மனு பெறவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட இயலாது. வரும் காலங்களில் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்குவது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க : 'மனசாட்சியின்றிச் செயல்படும் ஊடகங்கள்; அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட அச்சம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.