"நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது"- உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை!
"நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது"- உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை!
Madurai water body encroachment: நீர் நிலையை ஆக்கிரமித்து பட்டா வேண்டும் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை: பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், "மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும். தற்போது, அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், பொதுப் பணி துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்குத் தடை விதித்து எங்களுக்குப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மனுதார் புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்குப் பட்டா வேண்டும் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்து அதற்குப் பட்டா வேண்டும் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்குப் பட்டா வழங்க வருவாய்த் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. பட்டா வழங்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.
மேலும், அரசு ஆவணங்களின்படி புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும், பலர் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். எனவே பொதுப் பணி, வருவாய்த் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
