கிராவல் மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு: மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jan 11, 2022, 9:45 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

தனியார் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதி பெற்று சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கிராவல் மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "மேலூர் தாலுகா கீரனூர் கிராமத்தில் கிராவல் மண் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதிமுதல் 90 நாள்கள் வரை கிராவல் மண் சுமார் 1.5 மீட்டர் ஆழம் வரை குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் தற்போது சுமார் 5 மீட்டர் வரை ஆழத்திற்கு குவாரி அமைத்து கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள அரசு நிலத்திலும் கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. கிராவல் மணல் எடுக்க அனுமதி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால் அரசு அனுமதித்த நாள்களைவிட அதிக நாள்கள் குவாரி அமைத்து கிராவல் மண்ணை எடுத்துள்ளனர்.

இது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். இது குறித்து உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மேலூர் வட்டம் கீரனூரில் தனியார் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதி பெற்று அரசு நிலத்தில் சட்டவிரோத குவாரி அமைத்து கிராவல் மண் எடுத்துவரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குவாரி அமைக்க அரசு அனுமதித்த அளவு, தற்போது எந்த அளவிற்கு குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? - உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கலான புதிய மனு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.