'மக்களை தேடி மருத்துவம்' - பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்ற ஸ்டாலின்!

author img

By

Published : Aug 5, 2021, 2:06 PM IST

மக்களை தேடி மருத்துவம்

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்கி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணொலி வாயிலாக சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று இயன்முறை மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "முன்னோடித் திட்டமாக விளங்கக்கூடிய வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் மிகுந்த அர்ப்பணிப்போடு இருந்தது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தன்னார்வலர்கள்

கரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர், செவிலியரின் தன்னலமற்ற பணி முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையைத் தேடி வரக்கூடிய மக்கள் சூழ்நிலையை மாற்றக்கூடிய வகையில் மக்களை தேடி மருத்துவம் செல்லும் என்ற காலத்தை உருவாக்கியிருக்கிறோம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களில் வீடுகளுக்குச் சென்று மருத்துவச் சேவைகள் இதன் மூலமாக வழங்கப்படும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இயலாமல் உள்ள நபர்களைக் கண்டறிந்து உடல்நல பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்சினை, இதய நோய்கள், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கியப் பணியாக இருக்கப் போகிறது.

மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம்

இத்திட்டத்தில் பொதுச் சுகாதாரப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் பங்கெடுத்துச் சேவையாற்ற இருக்கிறார்கள். முதல்கட்டமாக ஆயிரத்து 264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், ஐம்பது இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவரும், 50 செவிலியரும் இல்லம் தேடிவரும் சேவையில் ஈடுபட உள்ளனர்.

மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்திற்காக 242கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனடைவார்கள்.

ஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகளில் பத்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு என்பது முக்கிய உறுதி மொழியாக உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற இத்திட்டம் இப்பகுதியில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம்

இதையும் படிங்க: உங்கள் இல்லம் நாடி வருகிறது 'மக்களை தேடி மருத்துவம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.