கிருஷ்ணகிரி: குரும்பரபள்ளி அடுத்த ஓட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுந்தரேசன். ராணுவ வீரரான சுந்தரேசன் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். போலுப்பள்ளி அருகே இருவரும் சாலையை கடக்க முயன்ற நிலையில், பெங்களூருவிலிருந்து, திருக்கோவிலூர் நோக்கி சென்ற கர்நாடகா பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் பேருந்தின் அடியில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பேருந்துக்கு பரவிய நிலையில், பேருந்தில் பயணித்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் பற்றிய தீயைப் போராடி அணைத்தனர். அதற்குள் தீயில் கருகி பேருந்து எலும்புக்கூடு போல் மாறியது. விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குரும்பரபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையை கடக்க முயன்ற ராணுவ வீரர் மற்றும் விவசாயி மீது பேருந்து மோதி இருவரும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்து - இரு சக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சீனாவின் சர்வதேச எல்லைகள் திறப்பு.. வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் ரத்து..