சமூக ஆர்வலர் ஜெகநாதன் உயிரிழந்த விவகாரம்... சமரச பேச்சுவார்த்தை தோல்வி

author img

By

Published : Sep 14, 2022, 8:01 AM IST

முதலமைச்சர் நல்ல முடிவு எடுக்கும் வரை உடலை பெற மாட்டோம்- சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேட்டி

கரூர் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து மூன்று நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கரூர் பரமத்தி அருகே கல்குவாரியை மூடக்கோரி போராடியதால் செப்.5ந் தேதி குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனிடையே அடுத்த இரண்டு நாட்களில் சமூக ஆர்வலர் ஜெகநாதனை கடந்த செப்டம்பர் 9ந் தேதி வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த ஜெகநாதனுக்கு ஆதரவாக சமூக அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக கரூர் பரமத்தி போலீசார் இது குறித்து இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரித்ததில் கல் குவாரி உரிமையாளர் செல்வக்குமார் கூலிப்படையை ஏவி திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு சாலை விபத்து என சித்தரித்த கூலிப்படை தலைவன் ரஞ்சித், கூலிப்படை திட்டத்திற்கு உதவிய லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே அவரது உடல் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனை நிறைவுற்ற பின்னரும் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக ஜெகநாதன் குடும்பத்தார் மற்றும் சமூக ஆர்வலர் முகிலன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள உடற்கூறு ஆய்வு மையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் திருச்சி மாவட்ட மேலிட பொறுப்பாளர் வேலுசாமி, சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், தோழர் களம் அமைப்பு நிர்வாகி சண்முகம் மற்றும் சுயாட்சி இந்தியா அகில இந்திய தலைவர் கிறிஸ்டினா , விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, தமிழ் புலிகள் கட்சி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர் நல்ல முடிவு எடுக்கும் வரை உடலை பெற மாட்டோம்- சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேட்டி

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான அதிகாரிகள் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மதியம் 12 மணியளவில் அளவில் துவங்கிய பேச்சுவார்த்தை மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதை அடுத்து, போராட்டத்தை தொடங்கியுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தார் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், விவசாயி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பதில் ல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது பரமத்தி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

எனவே விசாரணை வளையத்திற்குள் பரமத்தி காவல் ஆய்வாளரை கொண்டு வர வேண்டும். வேறு விசாரணை அதிகாரியை நியமித்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் உயிரிழந்த ஜெகநாதன் மனைவிக்கு அரசு சார்பில் விதவை உதவித்தொகையும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத கல்குவாரி மரணங்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரமத்தி அருகே உள்ள கணேஷ் முருகன், என்.டி.சி கல்குவாரிகளில் சமீபத்தில் நடைபெற்ற மரணங்களுக்கு கூட விசாரணை நடத்தப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் கல்குவாரி மற்றும் அனுமதி இன்றி இயங்கி வரும் அனைத்து கல் குவாரிகளிலும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் சட்டவிரோத கல்குவாரி குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டார் . தற்பொழுது ஜெகநாதன் மீது திட்டமிட்டு படுகொலை நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மரணம் இதுவே கடைசி மரணமாக இருக்க வேண்டும்.

இயற்கையை காக்க போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உறுதுணையாக அரசு இருப்பதை காட்டும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு கந்துவட்டி ,தீண்டாமை வன்கொடுமை போன்றவற்றிற்கு உள்ளதைப் போல சமூக ஆர்வலர்களை பாதுகாக்க தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் நிலவி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தமிழ்நாடு அரசு முடிவு கட்டும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் சகாயம் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்தபோது சமூக ஆர்வலர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். அதுபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஜெகநாதன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கும்பரை முதலமைச்சரின் அறிவிப்புக்காக உயிரிழந்த ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கரூர் மருத்துவ கல்லூரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜியா கான் தற்கொலை வழக்கு: மறுவிசாரணை மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.