மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

author img

By

Published : Aug 12, 2022, 8:00 AM IST

மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை, தமிழ்நாடு அரசின் சார்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது, அப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் அமைச்சர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாநகராட்சி மேயர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள் கூட்டத்தை முதலமைச்சர் நடத்தி மிக கண்டிப்பான உத்தரவுகளை அரசு அலுவலர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் சீரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் அடிப்படையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் இயக்கமாக முதலமைச்சர் எடுத்துள்ளார்.

நிச்சயமாக போதை பொருள் இல்லாத மாநிலமாக போதை பழக்கத்திற்கு ஆளாகாத ஒரு தமிழ்நாடாக, சிறப்பு மிக்க மாநிலமாக முதலமைச்சர் மாற்றிக் காட்டுவார். மின்சார திருத்த சட்ட மசோதாவை பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டவுடன் திமுக சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

அவரது அழுத்தம் காரணமாகவே நாடாளுமன்றத்தில் ஸ்டேடிண்ட் கமிட்டிக்கு திருத்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வழங்க கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயம், விசைத்தறி, குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு கடன்களை பெற்று, அரசு நிதிகளை பெற்று, மக்களின் பங்களிப்புகளை பெற்று உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் முழுவதுமாக தனியாருக்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அவர்கள் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகம் பயன்படுத்தக் கூடிய நுகர்வோருக்கும், தொழிற்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி பெற்று மின் நுகர்வோருக்கான அனுமதியை பெறுவார்கள். குறிப்பாக ஏழை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த அளவு பயன்படுத்தக் கூடிய மின் நுகர்வோருக்கு தனியார் துறை மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள்.

ஒட்டுமொத்தமாக நாம் உருவாக்கிய கட்டமைப்பை தனியாருக்கு தாரை வார்க்கும் அந்த சூழல்தான், மின்சார திருத்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன. பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரலை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மசோதாவை திரும்ப பெறும் வரை முதலமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள்” என கூறினார்.

இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், நீண்ட காலமாக கரூர் மாவட்ட விவசாயிகள் வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கோரிக்கை விடுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் செல்லும் உபரி நீரை கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிக்கான நிதி, சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அனைத்து பெரிய ஏரிகளுக்கும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளித்து பேசினார்.

மேலும் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி, கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையிலும், க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையிலும் நடைபெற்றது.

இதையும் படிங்க: ''போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு''; முதலமைச்சர் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.