பருவ மழையை எதிர்கொள்ள தயார் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Oct 12, 2021, 3:08 PM IST

Updated : Oct 12, 2021, 3:37 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி

அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 80 விழுக்காடு அதிகரிக்கப்படும் எனவும்பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாரான நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர்: "தூய்மை கரூர்"- ஒரு வார்டு ஒருநாள் முகாம் என்ற அடிப்படையில் கரூர் நகராட்சி முழுவதும் அதிகாலை நேரத்தில் நடைபெறும் தூய்மை பணிகளை ஆய்வு செய்துவருவதன் இரண்டாவது நாளாக இன்று (அக்.12) கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீதி வீதியாயாக நடந்து சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் வழிநெடுக கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு பரிந்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் நகராட்சியில் மாதக்கணக்கில் சாக்கடை தூர்வாருதல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் நடைபெறாமல் இருப்பதை கருத்தில் கொண்டு “தூய்மை கரூர்” என்ற திட்டத்தின் மூலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரூர் நகராட்சி வார்டுகளில் 3 ஆயிரத்து 580 தெருவிளக்குகள் உள்ளன. இவற்றில் தற்போது ஆயிரத்து 575 தெருவிளக்குகள் புதிதாக பழுது நீக்கப்பட்டுள்ளன. 100 மீட்டர் இடைவெளிக்கு ஒரு தெரு விளக்கு அமைப்பதற்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ஆயிரத்து 300 புதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. கரூர் நகராட்சியில் இது புது முயற்சியாகும்” எனத் தெரிவித்தார்.

பருவமழையை எதிர்கொள்ள தயார்

மேலும், பருவ மழையை எதிர்கொள்வதற்கு மின்சாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், “ஒரு லட்சம் மின் கம்பங்கள், மின் தளவாடங்கள் தயாரான நிலையில் இருக்கின்றன. பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரத்துறை பொருத்தவரையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

சூரிய மின்சக்தி மூலம் மின் உற்பத்தி இனி வரக்கூடிய காலங்களில் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து புதிய கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.

அனல் மின் நிலையங்களை பொருத்தவரையில் 58 விழுக்காடு மின் உற்பத்தி இருந்தது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அனல் மின்நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 200 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும் என்ற நிலையில் ஆயிரத்து 800 மெகாவாட் உற்பத்தி மட்டுமே கிடைத்துவந்தது.

அனல் மின் நிலைய உற்பத்தியை அதிகப்படுத்திய திமுக

கடந்தகால அரசு தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் அனல் மின் நிலைய அலுவலர்களை கொண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் விளைவாக ஆயிரத்து 800 மெகாவாட் உற்பத்தியில் இருந்து 3ஆயிரத்து 500 மெகாவாட் உற்பத்தி அதிகபடுத்தப்பட்டுள்ளது.

இது சராசரி 70 விழுக்காடு அதிகரிப்பாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 85 விழுக்காடு இருந்த அனல் மின் நிலைய உற்பத்தியை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த ஆய்வின் போது கரூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, கரூர் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் கோல்ட்ஸ்பாட் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வசூல்செய்யவே அரசு அலுவலர்கள்..! - அமைச்சர் போட்ட புதிய குண்டு

Last Updated :Oct 12, 2021, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.