கரூரில் புதிய கல் குவாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

author img

By

Published : Aug 27, 2021, 6:29 PM IST

கருத்து கேட்பு கூட்டம்

கரூரில் நொய்யல் ஆற்றுப் பகுதியை ஒட்டி புதிதாக இரண்டு கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கல்குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர்: பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்னிலை, கூடலூர் மேற்கு ஊராட்சியில் ‘பகவதியம்மன் ப்ளூ மெட்டல் மற்றும் ரப் ஸ்டோன் கல்குவாரி’, தென்னிலை கிழக்கு ஊராட்சியில் ‘ஸ்ரீவெங்கடரமண சுவாமி ப்ளூ மெட்டல் ரப் ஸ்டோன் கல்குவாரி’ ஆகிய இரண்டு தனியார் கல்குவாரிகள் அமைப்பதற்கு அரசிடம் அனுமதி வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தின் பேரில் அனுமதியளிப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் க.பரமத்தி காட்டுமுன்னூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஆக. 26) வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் நடைபெற்றது.

கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு

இக்கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், கனிம வளத்துறை அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அப்பகுதியில் அமையவுள்ள கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அலுவலர்களை முற்றுகையிட்டனர்.

மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்துகொண்டு கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்தினைப் பதிவு செய்தார்.

அப்போது பேசிய அவர், “க.பரமத்தி பகுதியில் குவாரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டால் சுமார் நான்கு கி.மீ., தொலைவிலுள்ள நொய்யல் ஆற்று நீர் ஆதாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி

மேலும், அருகேவுள்ள ஆத்துப்பாளையம் தடுப்பணை போன்ற நீராதாரங்கள் மாசடையக் கூடிய சூழல் ஏற்படும். ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரிகள், சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது மேலும் இரண்டு குவாரிகளுக்கு அனுமதி அளித்தால் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும். இதனால், புதிய கல்குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது, நிராகரிக்க வேண்டும்” என்றார்.

கருத்துக் கேட்பு கூட்டம்

இந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்த கருத்துக்கள், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.