ஆட்சி நிலைத்திருப்பதும், நிலைக்காமல் இருப்பதும் ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது - அண்ணாமலை

author img

By

Published : Sep 28, 2022, 7:08 AM IST

Etv Bharat

ஒரு ஆட்சி நிலைத்திருப்பதும், நிலைக்காமல் இருப்பதும் ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது. அரசு தன் கடமையை சரியாக செய்கிறதா என்பதை குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் உற்றுநோக்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் 100 காசநோயாளிகளை பாஜக சார்பில் தத்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு வருடத்திற்கு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்.

100 நோயாளிகள் தத்தெடுப்பு: பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஏழை மக்களை தாக்கும் காசநோய் எனும் டிபி 2025-க்குள் ஒழிக்கப்பட பாரத பிரதமர் மோடி, கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். காசநோய் இல்லாத இந்தியா எனும் முயற்சிக்கு முதல் கட்டமாக தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத முதல் முயற்சியாக கரூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் 100 நோயாளிகளை தத்தெடுத்து ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படுகிறது.

நாட்டில் 19 லட்சம் காசநோயாளிகள் உள்ளனர். செப்.17 பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் ஒரு லட்சம் யூனிட் ரத்தம் ரத்த கொடையாக அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது, தொடர்பாக தமிழக காவல்துறை சாதாரண வழக்குகள் பதிவு செய்கின்றனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எவ்வித சமரசம் செய்து கொள்ளாமல் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும். இந்திய உள்துறை அமைச்சரிடம் நான் பேசிய பிறகு, தமிழக காவல்துறை வழக்கு பதிந்து சிலரை கைது செய்துள்ளது. வன்முறைக்கும் தீவிரவாதத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

கடும் நடவடிக்கை தேவை: தனி நபர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது என்பது தீவிரவாத செயலுக்கு சமம். ஆனால், சாதாரண வழக்குகளாக தமிழக காவல்துறை பதிந்துள்ளது . தமிழகத்தில் வால்டர் தேவாரம், விஜயகுமார் போன்ற போலீஸ் அதிகாரிகள் போல் இன்றுள்ள காவல்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

மத்திய அரசு கவனிக்கும்: பாஜகவினர் இச்செயலில் ஈடுபடுவதாகக் கூறுவதை மூடர்கள் கூட்டம் ஒன்று வழக்கமாகக் கொண்டுள்ளது. பாஜகவை மதவாத கட்சி என்றும் மதம் பார்த்து அரசியல் செய்கின்றனர் எனவும் கூறுகின்றனர். மதம் பார்த்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்பவர்கள், தான் மதவாத கட்சி. பாஜகவை எதிர்ப்பதற்கு தவறு செய்பவர்களை ஆதரிப்பது கையாலாகாத தனம். பெட்ரோல் குண்டு வீசி வரும் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை ஒதுக்குவதற்கு, கட்சியை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்யும். அதில், நான் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் : உலகம் முழுவதும் உள்ள ஒரு மிகப்பெரிய இயக்கம் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒன்றுதான். ஆஸ்திரேலியா நாட்டில் கூட ஆர்எஸ்எஸ் இயக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் என்பது பூதம் என வேலையே இல்லாத இருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசியதை கண்டேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ் அமைப்பில் இஸ்லாமியர்கள்: ஒற்றுமையை வளர்ப்பதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கம் வரும் அக்.2 ஆம் தேதி பேரணி நடத்துவதற்கு நீதிமன்றம் மூலமும் காவல்துறை மூலமும் அனுமதி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ளவர்கள் எல்கேஜி சிறுவர்கள் போல திருமாவளவன் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கம் 96 வருடம் கடந்த இயக்கம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் கூட உள்ள இயக்கம் ஆர்எஸ்எஸ் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற ஒற்றுமை மதநல்லிணக்கம் வளர்க்கும் பிரிவு உள்ளது என்பதை தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

திமுகவினரை வரவேற்கிறோம்: கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திமுக எம்எல்ஏ பாஜக கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் பரவியது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் திமுக அரசு எம்எல்ஏக்களுக்கு சேர வேண்டிய கமிஷன் தொகையை வழங்காமல் நேரடியாக அனைத்து கலெக்சன்களும் கோபாலபுரம் நோக்கி செல்வதால் சொந்த பணத்தை செலவு செய்து தொகுதிக்குள் சுற்றி வரும் எம்எல்ஏக்கள் திமுகவில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யாரையும் பாஜக அழைத்து கட்சிக்கு வருமாறு கோரிக்கை விடுக்கவில்லை. அவர்களாக விரும்பி வந்தால் வரவேற்போம்.

கவனிப்பில் தமிழக அரசு: திமுக ஆட்சியை கலைப்பதற்கு, பாஜக சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஒரு ஆட்சி நிலைத்திருப்பதும் நிலைக்காமல் இருப்பதும் ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது. அரசு தன் கடமையை சரியாக செய்கிறதா? என்பதை குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் உற்றுநோக்கி வருகின்றனர்.

கும்பகர்ணன் போல தூக்கம்: சமீபத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் இதுவரை கண்டன அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் பேசி வருகிறார். சில நேரங்களில் தமிழக முதலமைச்சர் கும்பகர்ணனை போல தூங்கி விடுகிறார். அவ்வப்போது பாஜக அவரை எழுப்பி விடும் வேலையை செய்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க: ’அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ - திருமாவளவன் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.