நிலக்கரி மாயமான விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை நிச்சயம் - செந்தில் பாலாஜி உறுதி!

author img

By

Published : Aug 23, 2021, 9:18 AM IST

செந்தில் பாலாஜி

நிலக்கரி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், " வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறித்து பெறப்பட்ட புகார் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மூன்று பேர் அடங்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.

ஆனால், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சியில்தான் இது சம்பந்தமாக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது என்றும், தற்பொழுது அந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது என தவறான தகவலை அளித்துள்ளார்.

நடவடிக்கை நிச்சயம்

இதற்கு மறுப்பு தெரிவித்து குழு அமைக்கப்பட்ட விவரம், அறிக்கை ஆகியவற்றை ஊடகங்களுக்கு எங்கள் சார்பில் வழங்கிய பின்னரும் ஏன் இரண்டு நாட்களாக முன்னாள் அமைச்சர் அமைதி காத்து வருகிறார்.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது என்றால் எப்பொழுது அமைக்கப்பட்டது, அந்த ஆய்வுக்குழுவின் அதிகாரிகள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தவறுகளைக் கண்டறிந்து, அது எந்தத் துறையாக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மின் கட்டணம் வசூல் குறைவு

தொடர்ந்து பேசிய அவர், "தங்கர்பச்சான் பதிவிட்டுள்ள பதிவில் கட்டணக் கொள்ளை நடைபெற்றுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஜூலை 2020ஆம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்விநியோகம் இருந்த பொழுது மின்சார வாரியம் 780 கோடி கட்டணம் வசூல் மேற்கொண்டிருந்தது.

நடப்பாண்டு ஜூலை 21ஆம் தேதி சுமார் 4 ஆயிரத்து 400 மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் கடந்தாண்டை விடக் கூடுதலாக 80 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வைப்பு தொகை கட்டணம் ரத்து

வீட்டு உபயோகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மின் அளவீட்டை விட அதிகம் பயன்படுத்திய மின் இணைப்புக்கு கூடுதல் வைப்பு தொகை கட்டணம் வசூலிப்பதை ஏற்கனவே முதலமைச்சர் ரத்து செய்துள்ளார். இதனால் பொதுமக்களிடமிருந்து வரிவசூல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தங்கர்பச்சானிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை

இயக்குநர் தங்கர்பச்சான் அளித்த புகார் அடிப்படையில், அவரது வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்திய அலுவலர்கள், மின் இணைப்புக்கு கூடுதல் வைப்பு தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.

அவர் குடியிருக்கும் ஒரு வீட்டுக்கு இரண்டு மின் இணைப்புகளை பெற்றுள்ளார். பயன்படுத்திய யூனிட் அளவுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டை காட்டிலும் 50 விழுக்காடு மின் பயன்பாடு அதிகரித்துள்ள போதும், கட்டணம் கடந்தாண்டைவிட கூடுதலாக 80 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியத்தில் கட்டண கொள்ளை என்பதை ஏற்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: முதன்முறையாக மின்சார வாரியத்தில் 8,900 மின்மாற்றிகள் மாற்றம் - செந்தில்பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.