திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நவராத்திரி விழா - உடைவாள் கைமாற்ற நிகழ்வு கோலாகலம்

author img

By

Published : Sep 23, 2022, 1:25 PM IST

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நவராத்திரி விழா - உடைவாள் கைமாற்ற நிகழ்வு கோலாகலம்

திருவனந்தபுரம் பத்மாநாப சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு-கேரள அரசு இடையே வாள் பரிமாற்ற நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கன்னியாகுமரி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்பநாபபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள், திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லபட்டு, அங்கு பத்து நாட்கள் நவராத்திரி விழா பூஜையில் வைப்பது வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக நவராத்திரி விழா சாமி ஊர்வலம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பத்மாநாப சுவாமி கோயிலில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்திரி விழா தொடங்க உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் சாமி சிலைகள், நேற்று சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு பத்பநாபபுரம் அரண்மனைக்கு வந்தடைந்தது. இதனையடுத்து இன்று (செப் 23) பத்பநாபபுரம் அரண்மனையில் மன்னர்கள் பாரம்பரிய முறைப்படி மன்னரின் உடைவாளை, கேரளா அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நவராத்திரி விழா - உடைவாள் கைமாற்ற நிகழ்வு கோலாகலம்

இதில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கேரளா தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அரண்மனை வளாகத்திலுள்ள தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆலயத்திலிருந்து சரஸ்வதி அம்மன் எழுந்தருளி யானை மீது ஏறியும், வேளிமலை குமாரசுவாமி மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் சிலைகள் பல்லக்கிலும் பத்பநாபபுரம் அரண்மனைக்குள் எழுந்தருளியது.

இதனையடுத்து இரு மாநில காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை, வாத்திய மேளங்களுடன் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை குழித்துறை மஹாதேவர் திருக்கோயிலில் தங்க வைக்கப்படும் சாமி சிலைகள், நாளை (செப் 24) காலையில் தமிழ்நாடு-கேரளா எல்லையான களியக்காவிளையில் கேரள அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கேரள மாணவிகளின் சம்மக் சல்லோ ஓணம்... க்யூட் டான்ஸ்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.