'ரஜினி நற்பணி மன்றத்தையும் கலைத்துவிடுங்கள்' - முன்னாள் மா.செ. விரக்தி!

author img

By

Published : Jul 12, 2021, 10:01 PM IST

நற்பணி மன்றத்தை கலைக்க கூறும் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் பேசும் காணொலி

ரஜினிகாந்த் படங்களை ஓட வைப்பதற்காகவே அரசியலுக்கு வருவேன் என ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றுவதால், அவர் நற்பணி மன்றத்தைக் கலைக்க வேண்டும் என குமரி ரஜினி நற்பணி மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 12) தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என அறிவித்திருந்தார்.

அதேபோல் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் தனக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு எதிராக, குமரி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை ஏமாற்றும் வேலை

அதில், “ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து, ரஜினி நற்பணி மன்றத்துடன் இணைத்துள்ளார். இது தமிழ்நாட்டு மக்களையும், ரசிகர்களையும் ஏமாற்றும் வேலை. ஏனென்றால் நாங்கள் 40 ஆண்டு காலமாக ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரஜினிகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

நற்பணி மன்றத்தைக் கலைக்க கூறும் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் பேசும் காணொலி

2014ஆம் ஆண்டு டிசம்பரில், ரஜினி நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நான் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி எனக் கூறினார் ரஜினிகாந்த். இதனை நம்பி ரசிகர்கள் கடன் வாங்கி செலவு செய்த பல லட்ச ரூபாயை இழந்துள்ளனர்.

படங்களை ஓட வைக்கவே அரசியலுக்கு வருவதாகப் பேச்சு

2017ஆம் ஆண்டுக்கு முன்பு ரஜினிகாந்த், சினிமாவில் மார்க்கெட்டை இழந்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் எந்திரன் 2.0, காலா, கபாலி, பேட்டை போன்ற படங்களை ஓட வைக்கவே அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறி, குறுகிய எண்ணத்துடன் ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றிவிட்டார் ரஜினிகாந்த்.

தற்போது அண்ணாத்த படம் முடியும் தருவாயில் உள்ளது. அவர் இன்னும் படங்கள் நடிப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இதனால் இப்போது அவர் மீண்டும் மக்கள் மன்றம், நற்பணி மன்றமாகச் செயல்படும் எனக் கூறுகிறார்.

ரசிகர் மன்றத்தைக் கலைத்தால் விமோசனம்

இது மிகப்பெரிய மோசடியும், நம்பிக்கை துரோகமுமாக விளங்குகிறது. எனவே ரசிகர்கள் யாரும் ரஜினிகாந்தை நம்பி ஏமாறப் போவதில்லை. ரசிகர் மன்றமும் வேண்டாம் எனக் கூறினால் எங்களுக்கு விமோசனம். ஏனென்றால் 40 ஆண்டுகளாக ரசிகராக இருந்த பலர், இன்று உயிரோடு இல்லை.

மீண்டும் ரசிகர்கள் கடன் வாங்கி செலவு செய்வது, ரஜினியின் படங்கள் ஓடுவதற்காக மட்டுமே தவிர, வேறு ஒன்றுமில்லை. இதனால் அவர் ரஜினி ரசிகர் மன்றத்தைக் கலைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்கள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.