பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு; கோயிலில் சாமி ஆடுவதில் முன்விரோதம்

author img

By

Published : Dec 7, 2022, 1:25 PM IST

பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு; கோவிலில் சாமி ஆடுவதில் முன்விரோதம்...

கன்னியாகுமரி அருகே கோயில் திருவிழாவில் சாமியாடுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பால்தங்கம் (48). அப்பகுதியில் உள்ள அவர்களது குடும்ப கோயிலான பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கொடைவிழா நடைபெறும் போது சாமியாடி அருள் வாக்கு சொல்லி வந்ததாக கூறப்படுகிறது.

அதே பகுதியை சேர்ந்த விஜயன் (35) என்பவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் எல்லாம் கொடை விழா நடைபெறும் போது சாமியாடுவதால், இக்கோயிலிலும் கடந்த கொடை விழாவில் சாமியாடியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு விஜயனை இக்கோயிலில் சாமியாடக்கூடாது என ஊர் மக்கள் கண்டித்துள்ளனர்.

பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜயன் பால்தங்கத்திடம், "நீ அடுத்த ஆண்டு சாமியாடுவதற்கு உயிருடன் இருக்க மாட்டாய்" என்று எச்சரித்துள்ளார். நேற்று (டிச. 6) கோயிலில் கொடை விழா நடைபெறும் போது பால்தங்கம் சாமியாடியுள்ளார். அப்போது கோயிலுக்கு வந்த விஜயன், சாமி ஆடுவது போல் கோயிலில் பலகாரம் சுடுவதற்காக நன்கு கொதித்த நிலையில் இருந்த எண்ணெயை பால்தங்கத்தின் மீது ஊற்றியுள்ளார்.

இதில் பால்தங்கம் உடல் முழுவதும் கொதிக்கும் எண்ணெய் பட்டதின் காரணமாக கொப்புளங்கள் ஏற்பட்டதோடு, மார்பு, கை, கால் உட்பட உடல் உறுப்புகள் பலத்த காயமடைத்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட அப்பகுதியினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர பிரிவில் சேர்த்துள்ளனர்.

35 சதவீத தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் பால்தங்கம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சாமி வந்தது போல் நடித்து முன்விரோதம் காரணமாக பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய விஜயனை சுசீந்திரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபம்: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.