வாலாஜாபாத் கேஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து; 5 பேர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Sep 29, 2022, 12:19 PM IST

வாலாஜாபாத் கேஸ் சிலிண்டர் குடோன் தீ  விபத்து; 5 பேர் மீது வழக்கு பதிவு

வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்டதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவரும், தற்போதைய தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான அஜய்குமார் என்பவருடைய தம்பி ஜீவானந்தம் என்பவரின் ஏ.எஸ்.என்.கேஸ் ஏஜென்சி குடோனில் நேற்று(செப்.28) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் குடோன் அருகில் உள்ள தனது வீட்டிலிருந்த உரிமையாளர் ஜீவானந்தம், உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 3 மணி நேரம் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் அப்பகுதியில் சிலிண்டர் வாயு கசிவு காரணமாக யாரும் அருகே அனுமதிக்கப்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதுமே தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீக்காயம் அடைந்த 12 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏழு பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜீவானந்தம் உட்பட ஐந்து பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்து குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அஜய்குமார், மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன் ராஜ் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜய் குமார், அவரது மனைவி சாந்தி, உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேர் தலைமறைவானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விடுப்பு வழங்காததால் தடைபட்ட காவல் அதிகாரி மகளின் நிச்சயதார்த்தம்...வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.