பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டைக்கொள்கையை கையாள்கிறதா? - திருமாவளவன் எம்.பி.

author img

By

Published : Sep 19, 2022, 6:37 PM IST

பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா?- விசிக திருமா கேள்வி

பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் அரசு இரட்டைக்கொள்கையை கையாள்கிறதா என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம், சிங்கிலிபாடி உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4,750 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

இந்தப் பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க 13 கிராமத்தைச்சேர்ந்த கிராம மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விளை நிலங்களுடன், குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளதாக அறிந்து பரந்தூர், ஏகனாபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தொடர்ந்து பல்வேறு கட்டப்போராட்டங்களில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் 55ஆவது நாளான இன்று(செப்.19) ஏகனாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் தங்களது கைக்குழந்தைகள், குடும்பத்தாருடன் தரையில் அமர்ந்துக்கொண்டு, கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டும் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான கருத்துகளை கேட்டறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏகனாபுரம் கிராமத்திற்கு நேரில் வருகைப் புரிந்தார்.

அப்போது ஏகனாபுரம் கிராமத்திற்கு வருகைப்புரிந்த தொல்.திருமாவளவனின் காலில் விழுந்தும், கட்டி அணைத்து அரவணைத்தும் வயதான மூதாட்டிகள் கதறி அழுதபடி தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என்றும், தாங்கள் இங்கையே வசிக்க எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

பரந்தூரில் விமான நிலையம் வருவதால் கிராம மக்களுக்கு ஏற்படும் விளைவுகள்: அதனையடுத்து ஏகனாபுரம் கிராம மக்கள் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக இந்தப் புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பகுதிகளை உள்ளடக்கிய ஓர் வரைப்படத்தை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் நேரில் காண்பித்து எந்தெந்த பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன, நீர்நிலைகள் உள்ளன, விளை நிலங்கள் உள்ளன, என காண்பித்து இப்பகுதிகள் எல்லாம் விமான நிலையம் அமைந்தால் பாதிக்கப்படும், நிலங்கள் கையகப்படுத்தப்படும் என எடுத்துரைத்தனர்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டைக்கொள்கையை கையாள்கிறதா? - திருமாவளவன் எம்.பி.

அதன் பின் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலையிலேயே "வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்", "அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே" என்ற எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி, தங்களது எதிர்ப்பினை பதிவுசெய்தனர்.

இதன்பின் தொல்.திருமாவளவன் ஏகனாபுரம் கிராம மக்களிடம் தங்களின் கோரிக்கை குறித்து நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்களின் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்று வாக்கு உறுதியளித்தும், தங்களின் போராட்டம் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் பேசினார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில்: ’1,350 ஏக்கர் குடியிருப்புகள், விளை நிலங்கள் அல்லாத அந்தப் பகுதிகளில் ஏரிகளும், குளங்களும், குட்டைகளும், ஓடைகளும் இருக்கின்றன. 1,350 ஏக்கர் பரப்பளவுள்ள நீர் பிடிப்பைச் சேதப்படுத்தி அழித்தால் தான் விமான நிலையம் கட்ட முடியும் என்கின்றபோது அரசு இரட்டை கொள்கையைக் கையாள்கிறதா? சாதாரண மக்களுக்கு ஓர் கொள்கை. இது போன்ற வளர்ச்சி என்ற பெயரில் நீர்பிடிப்புகளை அழிப்பதில்லை தவறில்லை என்பது சரி என்றால், மக்கள் குடியிருக்கும் பகுதி நீர் பிடிப்புப்பகுதியாக இருந்தால் அதுவும் சரி தான் என்று சொல்ல நேர்கிறது. இதனை தான் இந்த மக்கள் வாதமாக முன் வைக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை சுமந்து நிற்கும் நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை அழிப்பதும் ஆரோக்கியமானதல்ல, இந்த பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படுவதற்காக அரசு கையகப்படுத்தும் நிலத்தில் நூற்றுக்கணக்கான இந்து கோயில்கள் உள்ளன, அவையெல்லாம் அழிக்கின்ற, தரைமட்டமாக்குகின்ற நிலை ஏற்படும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு தனது செயல்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அதனை மாற்றி நிலங்களை கையகப்படுத்த வேண்டும். நிலப்பரப்பை மாற்றி கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர், இந்த மக்கள். இந்த மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாங்களை உணர்ந்து அரசு இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும் காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டில் இருந்து தொடங்கி, பல்லவ அரசன் கம்பவர்மணால் உருவாக்கப்பட்டு 43 கி.மீ. கடந்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியை அடைவதற்கு 58 ஏரிகளை தனது நீர் வரத்தால் நிரப்பிக்கொண்டு சென்னையின் நீர் ஆதரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக திகழ்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் விவசாயத்தை காக்கும் கம்பன் கால்வாய் சுமார் 7 கி.மீ தூரம் இடிக்கப்படுவது ஏற்புடைவதல்ல. இது முக்கியமான கோரிக்கையாக இம்மக்கள் வைத்துள்ளார்கள்.

இந்தப் பகுதியிலேயே கம்பன் கால்வாய் என்ற ஓர் கால்வாய் ஓடுகிறது, இந்த பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படுகின்ற நிலப்பரப்பில் இந்த 7 கி.மீ., தூரம் உள்ள கம்பன் கால்வாய் தூர்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படி தூர்க்கப்பட்டால் அதிலிருந்து அந்த கால்வாய் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கும் மற்றும் 58 ஏரிகளுக்கும் நீர் நிரப்புவது நின்று விடும்.

இது இயற்கைக்கு எதிரானது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிடைக்கின்ற குடிநீர் ஆதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்கிற கருத்தை முதல் கருத்தாக, கோரிக்கையாக இம்மக்கள் முன் வைத்துள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகக்கோரி தமிழ்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.