கால்களே இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி - பாசத்துடன் வளர்ப்பேன் எனக்கூறிய மூதாட்டி

author img

By

Published : Oct 4, 2022, 7:01 PM IST

Etv Bharat

காஞ்சிபுரத்தில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை தன் மகனாக வளர்ப்பேன் எனக்கூறி மூதாட்டி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சிவபுரம் ஊராட்சியில் வசிப்பவர், மூதாட்டி வசந்தா மகாலிங்கம். இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில், கால்நடை வளர்ப்பதை தொழிலாகக் கொண்டு தனது வாழ்வினை நடத்தி வருகிறார்.

இந்த தள்ளாத வயதிலும் நேர்மையுடன் வாழ எண்ணி மூன்று ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், அதில் ஒரு ஆடு கடந்த சில மாதங்களுக்கு முன் கருவூற்று இன்று(அக்.04) அதிகாலை இரண்டு குட்டிகளை ஈன்றது.

இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி வசந்தா மகாலிங்கம், சற்று நேரத்திலேயே அதிர்ச்சியில் கண் கலங்கினார்.

உடனடியாக அருகில் இருந்த நபர்கள் இது குறித்து விசாரித்தபோது, ஆடு ஈன்ற போது ஒரு ஆட்டுக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடனும், மற்றொரு ஆட்டுக்குட்டி கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளியாகவும், இந்த சிறிய ஆட்டுக்குட்டியை எவ்வாறு காப்பாற்றுவது என்ற நிலையையும் அவர்களிடம் கூறி அழுதுள்ளார்.

இருப்பினும் சிறிது நேரத்திலேயே தனது மனதை தேற்றிக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் பால் புட்டியைப் பெற்று, அதில் தான் பசிக்கு வைத்திருந்த பாலை அந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதுகுறித்து மூதாட்டி வசந்தா கூறுகையில், 'அனைவரையும் இழந்து தனியாக வசிக்கும் இந்த நிலையில், இந்த கால்நடைகள் பெரிதும் பாசத்துடனும் தன்னிடம் வந்த நிலையில், ஒரு ஆட்டுக்குட்டியின் பிறப்பு எனது மனதை சிறிது நேரம் கலங்க செய்தது.

கால்களே இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி - பாசத்துடன் வளர்ப்பேன் எனக்கூறிய மூதாட்டி

மனிதனே மாற்றுத்திறனாளியாக இருந்து கடும் சிரமங்களை சந்திக்கும் நிலையில், மனதை தேற்றிக்கொண்டு இந்த ஆட்டுக்குட்டியை தொடர்ந்து காப்பாற்றிவிடுவேன். மேலும், தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு வழங்கும் இலவச கறவை மாடு திட்டத்தில் தனக்கு கறவை மாடுகள் வழங்கினால், எவ்வித தடையும் இன்றி அனைத்தையும் தன்னுடைய உறவினர் போல் வளர்ப்பேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கறவை ஆடுகள் வழங்கும் திட்டத்தையும் அரசு நடைமுறைபடுத்த வேண்டும்' என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.

இதையும் படிங்க: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது - வெற்றிமாறனுக்கு கருணாஸ் ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.