பொன்னேரி ஏரியின் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை எதிர்த்துப்போராட்டம்

author img

By

Published : Sep 13, 2022, 3:37 PM IST

பொன்னேரி ஏரியின் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை எதிர்த்து போராட்டம்

காஞ்சிபுரம் பொன்னேரி ஏரியின் நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணியை எதிர்த்து, சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை, போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பேருந்துகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவினை தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் தீவிரமாக செயல்படுத்தி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகரை ஒட்டி உள்ள பொன்னேரி ஏரியின் நீர்நிலை கரைப்பகுதிகளில் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள 82 வீடுகளை அகற்றும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களை வழிமறித்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் அகற்றும் பணிக்கு எதிர்ப்புத்தெரிவித்து சாலையில் அமர்ந்து கூச்சலிட்டும்,ஒப்பாரி வைத்தும், தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம் எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பேருந்துகளில் ஏற்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அப்போது இளம்பெண் ஒருவர் தனது உடலில் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி அப்பெண்ணை பேருந்தில் ஏற்றினர். அதன்பிறகு பேருந்தில் ஏற்றப்பட்ட போராட்டக்கார்களை தனியார் திருமண மண்டபங்களில் போலீசார் அடைத்து வைத்தனர்.

பொன்னேரி ஏரியின் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை எதிர்த்துப்போராட்டம்

மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புப்பகுதியில் இடிக்கப்பட உள்ள வீடுகளில் புகுந்து வீட்டு உபயோகப்பொருட்களை வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இதன் பின் ஆக்கிரமிப்பு வீடுகளை போலீசார் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவின்படி பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏகாம்பரநாதர் கோயில் வடக்கு மாடவீதி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: கனிம வளகொள்ளையைத் தடுக்க கம்ப்யூட்டர் ரசீது வழங்குக: காஞ்சிபுரத்தில் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.