துரை வைகோவின் செயல்... காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா...

author img

By

Published : Oct 1, 2022, 7:30 PM IST

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டிக்கதக்கது- மதிமுக வளையாபதி பேட்டி

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் செயலை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்: திராவிட முன்னேற்றக்கழகத்திடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1993ஆம் ஆண்டு வைகோ தனது ஆதரவாளர்களுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியினை தொடங்கினார். இப்போது தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகனான துரை வைகோவை தலைமை கழக நிலையை செயலாளராக நியமித்தார். அதன்பின் துரை வைகோவின் செயல்பாடுகள், பேச்சுகள் மூலம் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுவருவதாகவும், அவருக்கு பக்குவம் இல்லை என்றும் பல்வேறு மூத்த நிர்வாகிகள் தெரிவித்துவந்தனர்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் துரை வைகோ பேசிய போது, வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம். விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது என்று பேசினார். இந்த பேச்சு மூத்த நிர்வாகிகள், தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, தனது முகநூல் பக்கத்தில் "நான் 28 ஆண்டுகளாக மதிமுகவில் நீடித்துவருகிறேன். இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனப் பதிவிட்டார். இதையறிந்த வைகோ செல்போன் மூலம் வளையாபதியை தொடர்பு கொண்டு பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதோடு மதிமுக சார்பில் வளையாபதி தொடர்ந்து நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வளையாபதி பேட்டி

இந்த நிலையில் இன்று (அக். 1) காஞ்சிபுரம் மதிமுகவின் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 28 பேர் மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதன்பின் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் செயலை கண்டித்து தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும், மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாகவும் அறிவித்தனர். இந்த ராஜினாமா அறிவிப்பு மதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவின் முக்கிய செயல் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்கிய நிலையில் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது மதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:படிப்பினை முடித்த மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனடியாக வழங்குக... ஓபிஎஸ்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.