அரசின் திட்டங்கள் மின்சுவரில் விளம்பரம் செய்யப்படும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

author img

By

Published : Sep 19, 2022, 10:14 AM IST

அரசின் திட்டங்கள் மின்சுவரில் விளம்பரம் செய்யப்படும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

அரசின் நலத்திட்டங்கள் மின்சுவரில் விளம்பரப்படுத்தப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.கணேசன் ஆகியோர் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “முன்னாள் முதலமைச்சர் அண்ணா, வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு

இந்த இல்லத்தை செய்தித்துறை பராமரிப்பது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், சமுதாயத்திற்காக உழைத்தவர்கள் மற்றும் மொழிக்காக பாடுபட்டவர்கள் ஆகியோர்களுக்கு செய்தித்துறை நினைவு இல்லங்கள் அமைத்தும் அதனை பராமரித்தும் வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து கிராமங்கள்தோறும் சென்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய பெருமைக்குரியவர், அண்ணா. அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் விரைவாக மக்களைப் போய் சேருவதற்காக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்து வருகிறோம்.

அரசு நலத்திட்டங்களை மின்சுவர் மூலம் விளம்பரப்படுத்துவதற்காக 20 மாநகராட்சிகளை தேர்வு செய்துள்ளோம். முதற்கட்டமாக 10 மாநகராட்சிகளுக்கு ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் அரசின் செய்திகளும் மக்கள் நலத்திட்டங்களும் மக்களுக்கு விரைவாக போய் சேர்ந்து விடும்.

நீதிமன்ற தீர்ப்பின்படி அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். பத்திரிகையாளர்களுக்கென தனியாக நல வாரியம் தமிழ்நாடு முதலமைச்சரால் அமைக்கப்பட்டு, அக்குழு மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறது.

அதன்படி விரைவில் பத்திரிகையாளர்களுக்கு அரசின் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ?" - டிடிவி தினகரன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.