திட்டமிட்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 25, 2021, 5:10 PM IST

Updated : Sep 25, 2021, 5:35 PM IST

அதிமுகவினர் வேட்புமனு திட்டமிட்டு நிராகரிப்பு

கள்ளக்குறிச்சியில் இரண்டு அதிமுக மாவட்ட வார்டு உறுப்பினர்களின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 11 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கும், 98 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.25) கலந்துகொண்டார்.

அப்பொழுது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், "சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலைவிட மிக முக்கியமானது ஊரக உள்ளாட்சித் தேர்தல். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' அது போல வேட்பாளர்களின் முகத்தைப் பார்க்கும் பொழுது இப்போதே வெற்றி பெற்றதுபோல் தோன்றுகிறது. திமுக நிச்சயம் தில்லுமுல்லு வேலை செய்து வெற்றி பெற முயற்சி செய்யும்.

திட்டமிட்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

அதைமீறி நாம் வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது. ஆனால், தற்போது கள்ளக்குறிச்சியில் இரண்டு அதிமுக மாவட்ட வார்டு உறுப்பினர்களின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரித்தது தவறு, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மாறிமாறி மேடைகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறி வந்தனர். ஆனால், நீட் தேர்வு தற்போது நடைபெற்றுத்தான் வருகிறது. திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வெளியே வந்துவிடுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் ஒரே நாளில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: 'சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்'- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Last Updated :Sep 25, 2021, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.