காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திக்க முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்துடன் வந்திருந்தார். மகா பெரியவர் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து அவரிடம் ஆசிப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது, "கூட்டணி பலத்தால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. எப்பொழுதுமே சுய பலத்தாலும், நல்ல திட்டங்களாலும் திமுக ஆட்சிக்கு வந்தது கிடையாது. திமுக தற்போது ஆட்சி அமைத்து இருக்கிறது என்றால் கூட்டணி பலத்தாலும், உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை வழங்கி மக்களை கவர்ந்தே ஆட்சிக்கு வந்துள்ளது.
விடியல் தருகிறேன் என்றார்கள் ஆனால் அணில் தான் வந்துள்ளது மதுரை மாவட்டத்தில் அணியில் அடிக்கடி வந்து விளையாடுகிறது" என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம், உத்திரமேரூர் முன்னாள் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன், அதிமுக நிர்வாகிகள் கோல்ட் ரவி, திலக்குமார், உள்ளிட்ட அதிமுக பிரதிநிதிகள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.