தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Sep 29, 2022, 6:51 AM IST

தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - 12 பேருக்கு மேல்சிகிச்சை

காஞ்சிபுரம் மாவட்டம தேவரியம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவரும், தற்போதைய தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான அஜய்குமார் என்பவருடைய தம்பி ஜீவானந்தம், ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் கேஸ் குடோன் நடத்தி வருகிறார்.

இந்த குடோனில் இருந்து ஒரகடம் உள்பட சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (செப் 28) மாலை இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீயானது மளமளவென பரவியதைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளது.

இந்த விபத்தில் வீட்டின் அருகில் இருந்த கேஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், பூஜா (19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32) , நிவேதா (21), தமிழரசன் (10), சண்முகப்பிரியன், ஆமோத்குமார் என மொத்தம் 12 நபர்கள் 90% தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம், மறைமலைநகர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து

சுமார் மூன்று மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிலிண்டர் வாயு கசிவு காரணமாக, யாரும் அதன் அருகே அனுமதிக்கப்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த தீ விபத்தினால் அப்பகுதியே புகை சூழ்ந்தும், கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி ஜி.செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் 90% தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்த 12 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, “இந்த பகுதியில் உரிமையுடன் கேஸ் குடோன் இருக்கிறது.

இந்த குடோனில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிலிண்டர்கள் சப்ளை செய்து வருவதாக தெரிய வருகிறது. படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேவரியம்பாக்கத்தில் சிலிண்டர் குடோனில் பயங்கர விபத்து - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.