கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ராஜலட்சுமி என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ராஜலட்சுமி நேற்று (ஆக.19) தனது தம்பி சரவணனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசரமாக வீட்டுக்கு அழைத்துள்ளார்.
சரவணன் அக்காவின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் வழியாக சரவணன் பார்த்ததில், அவரது அக்கா தூக்கில் தொங்கி நிலையில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சரவணன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, அவர்களின் உதவியுடன் ராஜலட்சுமியின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்போது ராஜலட்சுமியின் உடல் உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆக.20) ராஜலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அப்பெண்ணின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பயத்தால் தம்பதி தற்கொலை... நெகட்டிவ் சான்றிதழால் அதிர்ச்சி!