ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் பெரியார் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள ஆவின் பால் பூத் பக்கவாட்டு சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டியில் பெரியார் படத்தின் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்ததைக் கண்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் நகரச்செயலாளரும், நகராட்சித் தலைவருமான ஆர். ஜானகிராமசாமி தலைமையில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயம் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.
சுவரொட்டியில் உள்ள பெரியாரின் புகைப்படத்தின் மீது காவிசாயத்தை ஊற்றி, மத மோதலைத் தூண்டும் வகையில் இச்செயலில் ஈடுபட்ட நபர்களைக்கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்ததன் பேரில் போலீசார் காவி சாயம் ஊற்றியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகரத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது!