இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நோயாளிகள், முதியவர்கள், மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்காணிப்பதும், பராமரிப்பதும் பலருக்கு சவாலான காரியமாகவே உள்ளது.பலர் மாத கணக்கில் அவர்களுடன் கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாகக் கண்காணித்து, தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது பலருக்கு சாத்தியமற்றதாகவே இருக்கிறது.
மேலும் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களையோ, வலிகளையோ வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருப்போர் பலர் உண்டு. அத்தகையவர்களைத் துல்லியமாகக் கண்காணித்து, அவர்களது உடல் மாற்றங்களை சம்மந்தப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் வழங்கக்கூடிய சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவிகளான சுஷ்மிதா, சன்மதி, விஷாலி, தனஸ்ரீ ஆகிய நான்குபேரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.
இந்த ஆடையானது நோயாளிகள், முதியோர், ஆட்டிசம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் ரத்த அழுத்தம், இதய செயல்பாடு, சுவாச செயல்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கண்காணிக்கும் என்று மாணவிகள் கூறுகின்றனர்.
இந்த ஆடையில் பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு சாதனமானது செல்போனில் இணைக்கக் கூடிய வகையில், வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம், இதனை அணிபவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும், குடும்ப மருத்துவர்களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும் என்கின்றனர் இந்த சாதனை மாணவிகள். மேலும் இவர்களின் இந்த கண்டுபிடிப்பானது தாய்லாந்தில் நடைபெற்ற சர்வேதச போட்டியில் முதல் பரிசான ஆயிரம் டாலர்களையும் தட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டி - தடம் பதித்த மாணவிகள்...