நெல்லில் ஈரப்பதம் அதிகம் என கொள்முதல் செய்ய மறுத்த அலுவலர்கள் - விவசாயிகள் வாக்குவாதம்

author img

By

Published : Sep 23, 2022, 9:26 PM IST

விவசாயிகள் வாக்குவாதம்

நன்செய்புளியம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 17 விழுக்காடு ஈரப்பதத்திற்கும் மேல் உள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு நெல்கொள்முதல் நிலைய ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 24ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து தற்போது டி.என். பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி, பாரியூர், கூகலூர், காசிபாளையம் உள்ளிட்டப்பல்வேறு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கான அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் நன்செய்புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு விதிப்படி 17 விழுக்காட்டிற்கும் மேல் ஈரப்பதம் உள்ள விவசாயிகளிடம் நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல், கடந்த 8 நாட்களாக காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஈரப்பதத்தை அளவிடும் இயந்திரத்தை சோதனை செய்ததில், இயந்திரத்தின் காலாவதி தேதி முடிவடைந்துள்ளது தெரியவந்தது.

இதனால் அங்கிருந்த விவசாயிகள் இயந்திரத்தை மாற்றி வேறொரு இயந்திரம் கொண்டுவரக்கோரி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் கோபிசெட்டிபாளையம் - பங்களாபுதூர் சாலையில் மலைபோல் நெல்மணிகளைக்குவித்து வைத்து விவசாயிகள் காத்திருந்தனர்.

நெல்லில் ஈரப்பதம் அதிகம் என கொள்முதல் செய்ய மறுத்த அலுவலர்கள் - விவசாயிகள் வாக்குவாதம்

நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்துகொண்டால் தான், மீதமுள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லை அறுவடை செய்யமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல், மழை பெய்தால் முற்றிலும் வீணாகி விடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் மண்டபத்தில் சூதாட்டம்...32 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.