கருமுட்டை விவகாரம்: சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

author img

By

Published : Aug 6, 2022, 12:33 PM IST

கருமுட்டை விவகாரம்: சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து 800 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

ஈரோடு கருமுட்டை விவகாரத்தில், சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து 800 மருத்துவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர், இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வழங்கிய ஜான் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை ஸ்கேன் சென்டர்களுக்கு முதற்கட்டமாக சீல் வைக்கவும், இதற்காக 15 நாட்கள் அவகாசம் அளித்து நோயாளிகளை வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைக்கபட்டதை ரத்து செய்தும், நோயாளிகளை மீண்டும் அனுமதிக்கவும் உத்தரவிட்டார்.

இவ்வாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி அமர்வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

கருமுட்டை விவகாரம்: சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து 800 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
கருமுட்டை விவகாரம்: சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து 800 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

இதனையடுத்து மருத்துவமனையில் பணியாற்றும் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி, நேற்றிரவு ஈரோடு சுதா மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 800 மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அந்தந்த மருத்துவமனையின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

அதேநேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழக்கம்போல் சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் அவசரகால சிகிச்சை, அறுவை சிகிச்சை வழக்கம் போல் நடைபெற்றன.

இதையும் படிங்க: கருமுட்டை விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.