ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும்: கே.ஏ.செங்கோட்டையன்

author img

By

Published : Jan 23, 2023, 6:26 PM IST

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, தமிழ்நாட்டில் திருப்புமுனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை கால்கோள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பந்தல் கால் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையப் போகிறார்கள், யார் யார் தேர்தலில் உதவி செய்வார்கள் என்பது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிவிப்பார். வேட்பாளர் தேர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி நாளை நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி சில முடிவுகளை மேற்கொள்ள இருக்கின்றார்.

போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெற்று, யார் போட்டியிடுவது என்பதை ஆட்சி மன்ற குழு முடிவு செய்து அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும். இந்த தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் திருப்புமுனையாக அமையும்.

தேர்தல் களத்தில் அமைதியாகவும், வீடு வீடாக அமைதியான முறையில் சென்று தேர்தல் பணியாற்றும் வகையிலும் எங்கள் பணி இருக்கும். இந்த தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என ஒரு சிலர் கூறி வருகின்றனர். மற்றவர்கள் சொல்வதைப் போல் இந்த தேர்தல் எளிதான வெற்றியாக அவர்களுக்கு அமையாது. அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது” என தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா, சமரசம் செய்ய தயார் என ஓபிஎஸ் சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த பதில் அளித்த அவர், "நாங்கள் பொதுச்செயலாளர் யாரை அறிவிக்கிறாரோ, அவருக்கு ஆதரவாக நாங்கள் களத்தில் இருக்கின்றோம்” என கேள்விக்கு தொடர்பில்லாத பதிலை தெரிவித்தார்.

பாஜக வின் ஆதரவு இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "பொறுத்திருந்து பாருங்கள்" என்றார். பின் இரட்டை இலை சின்னம் முழுமையாக தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், அதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்? - ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.