ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து கிழக்கு சட்டப்பேரவை காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தபோது, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸும், அதிமுகவும் நேரடியாக களம் காணும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைச்சர்கள் சு முத்துசாமி, கே.என். நேரு ஆகியோர் தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று திருமகன் ஈவேரா காலமானதால் காங்கிரஸ் கட்சியில் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளருக்கு தங்களது வாக்கினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, “ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்துள்ளோம். கழகத் தோழர்களுக்கு உதவியாக பொதுமக்களுக்கு உதவியாக தேர்தல் பணிகளை செய்ய இருக்கின்றோம்.
நிச்சயமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதற்கு முழுமையாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் பணியாற்றுவோம். தேர்தலில் மக்கள் கோரிக்கைகளை தேர்தல் முடிந்ததும் செய்து தருவோம், ஏற்கனவே மக்களுக்கான தேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம். இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு தான் வரி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. வளர்ச்சி பணிகளுக்கு ஏற்ப வரி வசூலிப்பது அவசியம். எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். நாங்கள் மக்களுக்கு செய்த பணிகளையும் சாதனைகளையும் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றோம்” என்றார்.
இதையும் படிங்க: இலவச மின்சாரம் ரத்து என்ற வதந்தியை நம்பாதீர்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி..