"தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு

author img

By

Published : Jan 15, 2023, 5:05 AM IST

Updated : Jan 15, 2023, 7:15 AM IST

Etv Bharat

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோட்டில் பொங்கல் பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

"தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு

'பொங்கல்' (Pongal - Harvest Festival) என்று சொன்னவுடனே நமது நினைவுக்கெல்லாம் வருவது புத்தாடைகளும், தித்திப்பான பொங்கலும் தான். நாம் தெகிட்ட தெகிட்ட கடிச்சு நொறுக்கி சுவைக்கின்ற கரும்பும், 'திமிலை மட்டும் தொட விடமாட்டேன்' என்ற பாணியில் ஜல்லிக்கட்டு காளைகளும், அதை துள்ளிக்கிட்டு அடக்க வெள்ளை வேட்டிய மடிச்சு கட்டிக்கிட்டு இறங்குற இளைஞர்களும் தான். 'நீ முதல தூக்கிறியா இல்ல நா தூக்கட்டுமா' என மற்றொரு பக்கம் இளைஞர்கள் இளவட்டக்கல்லை போட்டிப் போட்டு தூக்கி கொண்டிருப்பார்கள்.

இந்த பொங்கலுக்காக முன்னதாகவே, பனிக்காலங்களில் நம்முடைய வீடுகளை பூச்சியினங்கள் அண்டாமல் இருக்க வெள்ளை அடிப்போம். நம்ம இதுவரைக்கும் வானத்தில் பார்த்து ரசித்த வானவில்கள் எல்லாம் நம்ம வீட்டு வாசலில் வண்ணக் கோலங்களாக இடம் பிடித்திருக்கும். அவைகளில் இடையிடையே பூசணிப் பூக்களும் பூத்து கூடக் கொஞ்சம் அழகு சேர்க்கும்.

இந்த பொங்கல் தினத்திற்காகவே, நம்ம வீட்டில் இருக்குற நம்ம சகோதரிகள் எல்லாருமே, முதல் நாளே இந்த கோலமிடுவதில் யாருக்கு என்ன பணி என்று பேசியபடி அவற்றை முடித்துவிடுவர். இதற்கிடையில் நம்மளுடைய யோசனையெல்லாம், போன பொங்கலுக்கு நம்ம கேட்டதை வாங்கி தராத அப்பா, இந்த வருஷம் இந்த பொங்கலுக்கு நமக்கு வாங்கி தருவாங்களா? என்ற யோசனை ஓடிக்கிட்டு இருக்கும் இங்கு ஒரு சிலருக்கு.

இவைகளுக்கு நடுவில், பொங்கலுக்காக நடத்தும் உறியடி போட்டியும், கயிறு இழுக்கும் போட்டியும் நம்மள இன்னும் கொஞ்சம் உற்சாகப்படுத்தும். இந்த இனிய நன்னாளை நாம் ஆரம்பத்தில் 'நெல் அறுவடை திருநாள்' என்று கொண்டாடி வந்தநிலையில், காலப்போக்கில் தைப்பொங்கல் என்ற பெயரே இதற்கு நிலைத்துவிட்டது.

வயலில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வந்த நாளைத்தான், நாம் இவ்வளவு விமர்சையாக கொண்டாடி வருகிறோம். இதற்கு இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவே, பானையில் வைக்கும் பொங்கலை முதலில் சூரியனுக்கு படைத்து நமது நன்றிக் கடனை நாம் செலுத்துகிறோம்.

இந்த நன்னாளைக் கொண்டாடும் பழக்கமானது சோழர்களின் காலத்தில், 'குறியீடு' என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். 'உழவர்கள்' தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதுதான் பொங்கல் பண்டிகையாக, பின்னாளில் மாறியதாக பல வரலாற்று பதிவுகளில் காண்கிறோம்.

பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் என்று பொருள். எனவே, இந்த பண்டிகை முற்றிலும் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. தங்கள் நிலத்தில் விளைந்த புது நெல்லை குத்தி எடுத்து கிடைத்த பச்சரிசியைக் கொண்டு புது பானையில் இட்டு நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெள்ளம் உள்ளிட்டவைகள் கொண்டு பொங்கல் வைப்பர்.

பானை நிரம்பி பொங்கி வழியும்போது, வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக இணைந்து 'பொங்கலோ பொங்கல்' என்று ஆனந்தமாய் சத்தமிடுவர். இதன் பின், அனைவரும் பகிர்ந்து உண்பார்கள். வேளாண்மை என்ற வார்த்தைக்குள் அடங்கிய கால்நடைகளுக்கு ஆண்டின் பிற நாட்களைக் காட்டிலும் இந்நாளில் தமிழர்கள் அளிக்கும் மரியாதையும் பாசமும் அலாதியானது. அதற்கு அளவீடே கிடையாது.

இந்த நாளில் தங்களுக்கு மட்டும் புத்தாடை போதாது, குடும்பத்தில் ஒருவராக உள்ள கால்நடைகளுக்கும் சிறப்பு சேர்க்கவே கால்நடைகள் மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கும் வண்ண கயிறுகளை வாங்கி போட்டு அழகு பார்ப்பவர்கள் ஏராளம். இதற்காக அவைகள் முன்னதாகவே, உற்சாகமாக குளியல் போட்டு, கொம்புகளை விதவிதமாக வண்ணங்கள் சூட்டப்பட்டிருக்கும். இயற்கையோடு இணைந்து வளர்வதும் இயற்கையை வணங்குதலும் தமிழனின் வாழ்க்கை மரபு. இத்தகைய சிறப்புமிக்க இந்த பொங்கல் நன்னாளையே 'தமிழர் திருநாள்' என்று போற்றுகிறோம்.

மாட்டுப்பொங்கல்: பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகள் உழவர்களின் ஆகச்சிறந்த செல்வங்களாக மதிக்கப்படுகின்றன. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக உள்ள மாடுகளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த நாளில் தங்களுக்கு மட்டும் புத்தாடை போதாது, குடும்பத்தில் ஒருவராக உள்ள கால்நடைகளுக்கும் சிறப்பு சேர்க்கவே மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கும் வண்ண கயிறுகளை வாங்கி போட்டு அழகு பார்ப்பவர்கள் ஏராளம்.

காணும் பொங்கல்: மாட்டுப் பொங்கல் அடுத்த நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களை கண்டு மகிழ்வர். பிரிந்த நண்பர்களை சந்திக்கும் நாளாகும். இந்த நான்காம் தின பொங்கல் கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது, இந்துக்கள் மட்டுமில்லாது தமிழை தங்களின் தாய்பொழியாகக் கொண்ட கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொங்கல் வைத்து சிறப்பாகக் கொண்டாடும் ஒரு சமத்துவ உணர்த்தும் தலைசிறந்த நாளாகும்.

இந்த பொங்கல் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு தனிப்பெரும் விழாவாகும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழியின் தமிழர்களால் இன்று வரை நம்பப்படுகிறது. ‘ஆ’வினத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான பொருட்களை பொதுமக்கள் மும்முரமாக வாங்கி செல்கின்றனர். இதனையொட்டி ஈரோட்டில் மண்பானைகள், செங்கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளன. பொங்கி வழியும் பொங்கலைப் போல, அனைவரின் வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் நீங்காத செல்வமும் இடம்பிடிக்கட்டும்.

இதையும் படிங்க: Pongal greetings: ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து

Last Updated :Jan 15, 2023, 7:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.