தர்மபுரி நகரப்பகுதியை ஒட்டி உள்ள தர்மபுரி ரயில் நிலையம் செல்லும் வழியில் மணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கடையைத் திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அப்போது கடையில் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. அதைக்கவனித்த மணி யாராவது விட்டுச்சென்று இருப்பார்கள் என அந்தப்பையை எடுக்காமல் சுமார் 4 மணி நேரம் வரை பை இருந்த இடத்திலேயே இருப்பதை கண்காணித்துள்ளார். பின்பு பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 11 1/2 சவரன் தங்க நகை இருப்பதைக் கண்டறிந்து அதனை தனது நண்பர் உதவியுடன் தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
டீக்கடையில் 11 1/2 சவரன் தங்க நகை கிடந்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தீபக் என்பவர் தனது தங்க நகை தான் என டீக்கடை உரிமையாளரிடம் கைப்பற்றது எனத் தெரிவித்துள்ளார். டீக்கடை உரிமையாளா் மணி தான் காவல் நிலையத்தில் நகையை ஒப்படைத்ததாகவும்; காவல் நிலையத்தில் அதற்கான ரசீதுகளை காட்டி பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபக் தர்மபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் அவர்களிடம் தொலைந்துபோன நகை தங்களுடையது என்றும்; அதற்கான ரசீதுகளை காட்டி டீக்கடை உரிமையாளர் மணி ஒப்படைத்த தங்க நகையை பெற்றுச்சென்றார். தனது கடையில் கேட்பாரற்று கிடந்த நகையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த டீக்கடை உரிமையாளரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.