நீட் தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : Sep 7, 2022, 7:01 PM IST

Etv Bharat

நீட் தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருங்கள் எனவும்; பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் அமைக்க ரூ.7000 கோடியும், சுற்றுச்சுவர்கள் அமைக்க நபார்டு மூலம் ரூ.750 கோடி உட்பட மொத்தமாக ரூ.1300 கோடி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி: பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள் அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7000 கோடி ஒதுக்கப்படும் எனவும்; அதேபோல நபார்டு மூலமாக ரூ.750 கோடியில் பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.500 கோடியும்; பராமரிப்புக்காக ரூ.400 கோடியும் என மொத்தம் ரூ.1300 கோடி பள்ளிக் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட கல்வி அலுவலர்களுடனான மண்டல அளவிலான இரண்டாம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, '4 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிகளுக்கு என்ன தேவை, தன்னிறைவு பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பின்தங்கிய மாவட்டத்தில் கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப்பொருட்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா? அதில் இன்னும் எவ்வளவு தேவை; அதை விரைவில் எவ்வாறு வழங்குவது என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுமைப்பெண் திட்டம்-புரட்சிகரமானது: பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, ஓசூர் அருகே உள்ள தளி பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறையில் மிக முக்கியமான ஒரு திட்டமாக "புதுமைப்பெண் திட்டம்" உட்படப் பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் கற்றல் இடைவெளி உள்ள இடங்களில் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

பள்ளிகளுக்குச் சென்றால் கழிவறைகளிலேயே முதல் ஆய்வு: இவ்வாறு அரசுப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது என்பது புரட்சிகரமான ஒரு திட்டமாகும். அதேபோல, அரசுப்பள்ளிகளில் கழிவறை என்பது மிக முக்கியமானதாகும். இது குறித்து நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைக்குச்செல்வதற்கு முன்பாக, முதலில் கழிவறைக்கு தான் சென்று ஆய்வு செய்கின்றோம். திடீர் ஆய்வு செய்யும்பொழுது தான் உண்மை நிலவரம் தெரியும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

ஆண்டொன்றுக்கு ரூ.1300 கோடி: மேலும், பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7000 கோடி ஒதுக்கப்படும். அதில் இந்த ஆண்டுக்கு ரூ.1300 கோடி கொடுக்கப்படும்.

18,000 வகுப்பறைகள் கட்டுவது மட்டுமல்ல. கழிவறைகள் எங்கெங்கு தேவைப்படுகிறது. அங்கு அனைத்திலும் கழிவறைகள் கட்டப்படும் சிஎஸ்ஆர் ஆக்டிவிட்டி மூலமாக, தொண்டு நிறுவனங்கள் மூலமாக நல்ல பணிகள் செய்து வருகிறோம்.

நீட் தேர்வு முடிவுகள்-தன்னம்பிக்கை தேவை: இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், நீட் தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும், மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருங்கள். 'முதலமைச்சர் நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல் தந்தை ஸ்தானத்திலிருந்து தான் ஒவ்வொரு திட்டங்களையும் தீட்டுகின்றேன்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவார்.

ஆலோசனைக்கு அழையுங்கள்: அதன்படி, மாணவ மாணவிகளுக்காக உயர்கல்வி வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று அந்தந்த பள்ளிகளில் தயாராக இருக்கிறார்கள். மதிப்பெண்களைப் பார்த்து பள்ளிக்குச்செல்லும்போது, ஆசிரியர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள 104 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உங்களுக்குத் தேவையான சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

மேலும், நபார்டு மூலமாக ரூ.750 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு டார்கெட். இது மட்டுமல்லாமல் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.500 கோடி பராமரிப்புக்காக ரூ.400 கோடி, ஊரக வளர்ச்சி மூலமாக எல்லாம் சேர்த்து ரூ.1300 கோடி பள்ளிக்கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் கொண்டு செல்வது நோக்கமாக உள்ளது.

தனித்திறனை கொண்டுவர வேண்டும்: பள்ளிகளில் உள்ள பசுமைப்படை மூலமாக மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் பழங்கள், காய்களை சத்துணவில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் உடற்பயிற்சிகளில் பள்ளி குழந்தைகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு உண்டான கட்டணத்தையும் விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்கின்ற கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தாக பள்ளிக்கல்வித்துறை உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணல் அம்பேத்கரின் கூற்றை திருமாவளவன் ஏற்கிறாரா? மாநில பாஜக துணைத் தலைவர் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.