ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குக - கே.பி.அன்பழகன்

author img

By

Published : Jan 22, 2023, 6:32 PM IST

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி

தருமபுரியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, போட்டியைக் காண வந்த கோகுல்(14) எனும் பள்ளி மாணவன் மாடு முட்டியதில் உயிரிழந்தான். இது குறித்து புகார் கொடுக்க சென்ற போது அதியமான் கோட்டை காவல்துறையினர் ஏளனமாக சிரித்து, பெற்றோர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இறந்த பள்ளி மாணவனின் பெற்றோர்களை சந்தித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது, "தருமபுரி அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் அடிபட்டவுடன் சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவக்குழு நியமனம் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்ல தீயணைப்புத்துறையினர் மூலம், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த கால ஆட்சியில் சிறப்பாக செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் மருத்துவ வசதி முறையாக இல்லை, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை, முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என இறந்த சிறுவன் கோகுலின், தந்தை சீனிவாசன் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதுதான் யதார்த்தமான உண்மை. ஜல்லிக்கட்டுப் பேரவையின் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தினார்களே தவிர, அதற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பார்வையாளர்களுக்கு என்று தடை செய்யப்பட்டு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதனால் தான் விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

சிறுவனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு, அரசாங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ரூபாய் 50 லட்சம் நிவாரணமும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். கோகுல் படித்து அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய சூழலில் இருந்துள்ளார்கள். ஆகவே, அந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பெற்றோர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், சரியான வழியில் ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு வழங்காத காரணத்தினால் தங்கள் மகன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் தகவல் அறிக்கையில் ஜல்லிக்கட்டினை நடத்தியவர்கள் யார்? அவர்கள் பெயரை பதிவு செய்யாமல் உள்ளனர். ஆகவே, அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சிறுவனை இழந்து வாடும் இந்த நிலையிலும் அவரது கண்கள் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் அவரின் கண்களை பெரிய மனதோடு தானம் செய்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: இளைஞரை காளை முட்டி தூக்கி வீசிய வீடியோ; தருமபுரி 'எருதுவிடும் விழா'வில் நடந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.