தருமபுரி: மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனை உண்ணுவதால் கேன்சர் உள்ளிட்டப்பல்வேறு நோய்கள் வருவதாகவும், இந்த மீன்கள் உள்ளூர் மீன்களை அழித்துவிடுவதால், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்கக்கூடாது என மீன் வளர்ப்பவர்களுக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
தர்மபுரி மாவட்டத்தில் 32 இடங்களில் குட்டை அமைத்து, அதில் சிலா் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்த்து வந்தனா். ஆப்ரிகன் கெளுத்தி மீன்கள் மதுபான பார்களுக்கும், கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் விற்பனை செய்ய அனுப்புகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் மீன் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோகுலரமணன் தர்மபுரி அருகே உள்ள மதிகோண்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு 3 குட்டைகளில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக அவ்வகை மீன்கள் கோழிக்கழிவுகளிலும், கழிவுநீரிலும் வளர்ந்து துர்நாற்றம் வீசியது.
இதனையடுத்து 3 குட்டைகளிலும் தண்ணீரை வெளியேற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் குட்டையில் உள்ள 5 டன் மீன்கள் மீது மண் போட்டு மூடி அழித்தனர். இதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் குட்டைகளைத்தொடர்ந்து அழித்து வரும் பணியில் ஈடுபடுவதாக மீன்வளத்துறை அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிமுக அலுவலகம் சூறையாடல் விவகாரம் - அலுவலக மேலாளர் நேரில் விளக்கம்