படித்தது 12ஆம் வகுப்பு.. பார்ப்பது 25 ஆண்டுகள் போலி மருத்துவம் - பின்னணி என்ன?

படித்தது 12ஆம் வகுப்பு.. பார்ப்பது 25 ஆண்டுகள் போலி மருத்துவம் - பின்னணி என்ன?
Dharmapuri fake doctor: தருமபுரி நகரின் மையப் பகுதியில் 12ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவ தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி: தருமபுரி நகரின் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள குப்பாண்டி தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனபால் கிளினிக் என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அன்பழகன் (60) என்பவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவரது மனைவி ஜெயந்தி (54) ஆகிய இருவரும் இணைந்து கிளினிக்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் போலி மருத்துவர்கள் என கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அபராதமும் விதிக்கபட்டது. இதனையடுத்து, இவர்களது மகள் பாரதி பிரியை (37) என்பவரை பல் மருத்துவ படிக்க வைத்துள்ளனர்.
அவரும் படிப்பை முடித்து விட்டு, அதே தனபால் கிளினிக்கில் பல் மருத்துவர் என்பதற்குப் பதிலாக, பொது மருத்துவர் என பெயர் பலகை வைத்துக் கொண்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு வரும் நோயாளிகளுக்கு அன்பழகள் மற்றும் அவரது மனைவி இருவருமே ஊசி போடுவது, மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவது என மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
மேலும், இந்த கிளினிக்கில் மருந்தகமும் செயல்பட்டு வருகிறது. தருமபுரி நகரின் மையப் பகுதியில் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்க்கும் வைரல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.
மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள் மீது மருத்துவத் துறை அதிகாரிகள் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுத்து வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், குப்பாண்டி தெருவில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து உண்மை கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
