பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 'சாதிய வன்மம் உள்ளது' - மா. கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ரவீந்திரன்!

author img

By

Published : Jun 14, 2022, 6:05 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு

தொப்பூர் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் சாதிய வன்மம் உள்ளது என்றும்; மார்க்சிஸ்ட் கட்சி நீதி கிடைக்கும் வரை போராடும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி: பட்டியலின இளைஞர்கள் மீதான தாக்குதலைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மே 28அன்று இரவு தர்மபுரி மாவட்டம், தொப்பூர் செக்போஸ்ட் அருகில் 3 இளைஞர்கள் மீது திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தடயங்களும் தகவல்களும் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஜீவா என்பரின் கால் துண்டிக்கப்பட்டு நீண்ட தொலைவில் உள்ள முள்புதரில் வீசப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டியலின இளைஞர்கள் மீது திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தை விபத்து எனக் கூறி தொப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றும்; மேலும் இச்சம்பவம் குறித்து உண்மை நிலையைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிடவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தர்மபுரி மாவட்டச்செயலாளர் ஏ.குமார் பேசுகையில், 'தொப்பூர் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், காவல் துறை முழுமையாக விசாரிக்காமல் சம்பவத்தை மூடிமறைக்கும் நோக்கத்தில் விபத்து என வழக்குப்பதிந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் முன்னுக்குப்பின் முரணாண தகவலை அளித்துள்ளனர். பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சம்பவம். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்யவேண்டும்’ எனப் பேசினார்.

மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில், ”பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல் துறை ஜனநாயக முறையில் போராடும் உரிமையை மறுக்கிறது. ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? தாக்கப்பட்ட இளைஞர் ஜீவாவின் தந்தை சொல்கிறார் முதலில் வாகனத்தை இளைஞர்கள் மீது இடித்தனர். பின்பு அங்கு வந்தவர்கள் ஜீவாவின் காலை வெட்டினார்கள் என்று வாக்குமூலத்தில் சொல்லியும் பிரச்னையை காவல் துறை மூடிமறைக்கிறது” என்றார்.

மேலும் பேசிய அவர், 'இந்தப் பிரச்னையில் சாதிய வன்மம் உள்ளது. அதனால் தான் நீதி கேட்டுப் போராடுகிறோம். தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் வன்கொடுமை செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு

இம்மக்களுக்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தியது. இதன்விளையாக நீதிமன்றம் இந்த வழக்கில் உள்ள வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகியோர் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதேபோல் சேலம் கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, தொப்பூர் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்’ எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலப்பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் காந்தியிடம் தலைவர்கள் மனு கொடுத்தனர்.

இதையும் படிங்க: கும்பகோணம் அருகே காதல் திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் இளம் தம்பதி ஓட ஓட விரட்டி கொலை !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.