சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

author img

By

Published : Sep 28, 2022, 1:09 PM IST

இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞனின் உடல் உறுப்புகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டு கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன், வெண்ணிலா தம்பதியின் மூத்த மகன் திவாகர். பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ஜோலார்பேட்டையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்பொழுது புதிதாக சாலை அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் திவாகரன் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் திவாகரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திவாகரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் திவாகருக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திவாகருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால், மூளைச்சாவு அடைந்தார். இதனால் சுயநினைவை இழந்து இருந்துள்ளார்.

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

இந்நிலையில் திவாகரன் குடும்பத்தினர் மற்றும் உறவினரிடம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் திவாகர் மூளை சாவு ஏற்பட்டதால், சுயநினைவு இன்றி இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திவாகரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

திவாகரனின் தலை பாகங்களை தவிர உடலில் உள்ள இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். என் மகன் உயிருடன் இல்லை என்றாலும், அவனுடைய உடல் உறுப்புகள், உயிரோடு இருப்பவர்களுக்கு, உயிர் வாழ உதவட்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உடல் உறுப்பு தானத்தை முறையாக பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் மருத்துவமனையிலிருந்து, கார்த்திக் மதிவாணன் தலைமையிலான மருத்துவர் குழுவினர், இன்று(செப்.28) தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து திவாகரனின் உடல் உறுப்புகளை பரிசோதனை செய்தனர்.

இதில் இதயம் அறுவை சிகிச்சை செய்து எடுத்துச் சென்றால் பொருத்துவதற்கான பலன் இல்லாத நிலையில் இருந்துள்ளது. இதயத்தை தவிர்த்துவிட்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை தனி ஆம்புலன்ஸ் மூலம் கோயமுத்தூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு அறுவை சிகிச்சை செய்த கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டு பாகங்களும் சுமார் 10 மணி நேரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து அறுவை சிகிச்சை செய்து மற்றவருக்கு பொருத்த முடியும். அங்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தேவையான நோயாளிகள் மருத்துவமனையில் இருப்பதால், அவர்களுக்கு சுமார் 4 மணி நேரத்தில் பொருத்தப்படும் என மருத்துவர் குழுவினர் தெரிவித்தனர்.

விபத்துகளில் மூளை சாவு ஏற்பட்டு சுயநினைவை இழப்பவர்கள், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என மருத்துவக் குழுவினரும், உயிரிழந்த திவாகரனின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவிகள்...3 பேர் உயிரிழந்த பரிதாபம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.