கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீனாட்சி பேட்டை ஜங்ஷனில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நபர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நபரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது பெயர் காளிதாஸ் என தெரியவந்தது. மேலும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான பாலமுருகனின் தம்பி என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர், காளிதாஸிடம் விதிமுறைகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததாகவும் முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும் கூறினர். இதனையடுத்து காளிதாஸ் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலானது. அதில் காளிதாஸ் காவலர்களை ஒருமையில் பேசி வாகனத்தை எதற்காக நிறுத்தினீர்கள். நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் தம்பி. நான் வழக்கறிஞர். எங்களிடம் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். எங்களையே தடுத்து நிறுத்தும் அதிகாரம் யார் உங்களுக்கு கொடுத்தது. என் மீது எப்படி உங்களால் வழக்கு போட முடியும் என்றெல்லாம் பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகவே காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல் தகாத வார்த்தையில் ஒருமையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.