உயிர் பலி கொண்ட லாரி... தீயிட்டுக் கொளுத்திய கிராமவாசிகள்!

author img

By

Published : Aug 12, 2021, 7:39 AM IST

lorry

நெய்வேலி என்.எல்.சியில் சாம்பல் ஏற்றிச்சென்ற லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஐந்து லாரிகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்திலிருந்து நிலக்கரி சாம்பல் பல்வேறு பணிகளுக்காக வெளியே எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இந்தச் சாம்பலை, மேலகுப்பம் கிராமத்தின் வழியாக லாரிகள் எடுத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து பல முறை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லாரியை தீயிட்டுக் கொளுத்திய கிராமவாசிகள்

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்.11), மேலகுப்பம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, அவர்கள் மீது மோதியது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த அவர் மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டனர். அவ்வழியாகச் சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தீ வைத்தனர்.

மேலும், சாம்பல் ஏற்ற நின்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து நெய்வேலி தர்மல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்: தெலங்கானாவில் கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.