கடலூரில் கலவரம்: முன்னாள் தலைவர் தம்பி வெட்டிக் கொலை... வீடுகள், படகுகளுக்கு தீ வைப்பு!

author img

By

Published : Aug 2, 2020, 5:36 AM IST

Updated : Aug 2, 2020, 6:58 AM IST

gundu uppalavadi riot

கடலூர்: குண்டு உப்பலவாடி உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தால் முன்னாள் ஊராட்சித் தலைவரின் தம்பி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், படகுகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் குண்டு உப்பலவாடி கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்காக முன்னாள் ஊராட்சித் தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மதியழகன் மனைவி சாந்தி வெற்றிபெற்றார்.

இதனால் மதியழகன் தரப்பினருக்கும் மாசிலாமணியின் தரப்பினருக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவந்துள்ளது. அவ்வப்போது சண்டை ஏற்பட்டு, இரு தரப்பினரும் அடிக்கடி காவல் நிலையத்தில் புகாரளித்துவந்தனர். இந்த மோதலின் உச்சக்கட்டமாக தற்போது கொலையில் முடிந்திருக்கிறது. இதனால் இரு தரப்பினரிடையே கலவரம் வெடித்துள்ளது.

மாசிலாமணியின் தம்பி மதிவாணன் (36) நேற்று இரவு 9 மணியளவில் கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த பத்து பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் அவரது தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதால், ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துபோனார். மதிவாணன் இறந்ததை உறுதி செய்ததும், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

தகவலறிந்த மாசிலாமணியின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். மதிவாணன் கொலையுண்டு கிடந்தைக் கண்டு கதறி அழுதனர். மதிவாணனின் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த மாசிலாமணியின் ஆதரவாளர்கள், தாழங்குடா கிராமத்தில் ஆறு வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், 25க்கும் மேற்பட்ட படகுகள், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவம் இடம் வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பதறவைக்கும் கலவரக் காட்சிகள்

இதனிடையே மதிவாணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மதியழகன்தான் திட்டம் தீட்டி ஆட்களை வைத்து மதிவாணனை தீர்த்துக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பாகக் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். மேற்கொண்டு விசாரணையிலேயே உண்மை என்னவென்று தெரியவரும். உயிரிழந்த மதிவாணனுக்கு பிரதீமா (29) என்ற மனைவியும், துவாரகா (9) என்ற மகளும், பிரமேஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு!

Last Updated :Aug 2, 2020, 6:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.