தொழிலாளர் கொலை வழக்கு: திமுக எம்பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

author img

By

Published : Oct 14, 2021, 6:43 AM IST

எம்.பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷிடம் விசாரணை நிறைவுற்றதையடுத்து, அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளியாக ஏழு ஆண்டுகள் வேலை செய்துவந்தார்.

செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராசு கொலைசெய்யப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் திமுக எம்பி ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிந்து ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த திமுக எம்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ரமேஷ் கடலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

சிபிசிஐடி காவல் துறையினர் இரண்டு நாள் விசாரணை செய்ய நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர். இதற்கிடையில் கடலூர் குற்றவியல் முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஒருநாள் விசாரணைக்கு அனுமதித்திருந்தார்.

அவரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ரமேஷ் தனக்கு எதுவும் தெரியாது என்று மட்டும் பதில் அளித்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை 4 மணி நேரத்திற்குள் முடித்த சிபிசிஐடி காவல் துறையினர் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். தொடர்ந்து அவரை வருகிற 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்க வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.