கோவையில் அதே இடத்தில் மீண்டும் பெரியார் உணவகம் திறப்பு!

author img

By

Published : Sep 18, 2022, 7:12 PM IST

கோவையில் அதே இடத்தில் மீண்டும் பெரியார் உணவகம் திறப்பு

கோவை காரமடையில் இந்து முன்னணி அமைப்பினரால் தாக்கப்பட்ட அதே இடத்தில் தந்தை பெரியார் உணவகம் அவரின் பிறந்தநாளன்று நேற்று கோலாகலமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவை: காரமடையில் தந்தை பெரியார் உணவகம் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரபாகரன் என்பவரின் கடை மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பெரியார் பிறந்தநாளான தந்தை பெரியார் உணவகத்தை அதே இடத்தில் சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் சுப.வீரபாண்டியன் நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். திமுக மற்றும் திராவிட இயக்கத்தினைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், 'தந்தை பெரியார் உணவகத்தை உலகளவில் பிரபலப்படுத்தியவர்களுக்கு நன்றி. பிராமணாள் கபே, ரயில் நிலையத்தில் பிராமணர் சாப்பிடும் இடமாக இருந்தது. இதற்கு எதிராக போராடியது திராவிட இயக்கம். இதனுடைய தொடர்ச்சிதான் தந்தை பெரியார் உணவகம். இந்த உணவகத்திற்கு பாதுகாப்பு மட்டுமல்ல, எந்த உதவி என்றாலும் செய்ய அனைவரும் தயாராக இருக்கின்றோம்' எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளரும், சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவரும் சுப.வீரபாண்டியன் பேசுகையில், 'காரமடையைச் சேர்ந்த பிரபாகரன் உணவு கடையைத் திறந்தார். ஆனால், எதிரிகள் இதை தாக்கி உணர்வூட்டி இருக்கின்றனர். நேற்று உதயநிதி இருந்த மேடையில், அம்மா உணவகங்களை பெரியார் உணவகமாக மாற்றினால் என்ன என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு உதயநிதி மறைந்த முன்னாள் முதலமைச்சரின் தொடங்கிய அம்மா உணவகங்களின் பெயரை மாற்றுவதற்கு முதலமைச்சர் சம்மதிக்க மாட்டார் என உதயநிதி கூறியுள்ளார்.

அதற்குப் பதில், நாடெங்கும் பெரியார் பெயரில் இலவச உணவகங்களை தொடங்குவது குறித்து யோசிக்கலாம் என்று சொன்னார். பெரியார் சமத்துவபுரங்களை, பெரியார் சிலைகளை, பெரியார் நகர்களை என்ன செய்யப்போகின்றீர்கள். கடை தாக்கப்பட்டதை எளிதில் கடந்து விடக்கூடாது' எனவும் தெரிவித்தார்.

'எனக்கு சவுக்கு சங்கர் கருத்துகளில் உடன்பாடு கிடையாது என்றாலும், நீதிமன்றம் குறித்து பிரசாந்த் கிஷோர் பேசிய போது மன்னிப்புக்கேட்டால் போதும் என்றார்கள். துக்ளக் குரு மூர்த்தி பேசிய பேச்சுக்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவில்லை. பிரசாத் கிஷோருக்கும், குருமூர்த்திக்கும் இருக்கும் சலுகை சவுக்கு சங்கருக்கு இல்லாதது நூல் அளவு வித்தியாசம்தான்.

கோவையில் அதே இடத்தில் மீண்டும் பெரியார் உணவகம் திறப்பு!

சவுக்கு சங்கரோடு ஆயிரம் முரண்பாடு இருக்கின்றது, என்றாலும் மன்னிப்புக் கேட்க முடியாது என்று சிறைக்குச் சென்று இருப்பதைப் பாராட்டுகின்றேன். திராவிட இயக்கத்திற்கு எதிரானவராக இருந்தாலும் நாம் உண்மை பக்கம் இருக்கின்றோம்.

பெரியார் உணவகம் என்ற பெயரில் கடையை உடைத்தவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை.
கோவையையும், கன்னியாகுமரியையும் மாற்றிவிடலாம் என முயல்கின்றனர், அது முடியாது; திராவிட இயக்கத்தின் தாக்கம் இல்லாத மண் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை’ எனத் தெரிவித்தார்.

மேலும், 'காரமடை தந்தை பெரியார் உணவகத்தின் பெயர் சிகாகோ, கலிபோர்னியா வரை பரவி இருக்கின்றது' என்றும் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுப.வீரபாண்டியன், 'நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்று எண்ணம் கூடாது. அவரவர் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பிரதமர் மோடி பிறந்தநாளை யாரும் தடை செய்யக்கூடாது என்று நினைக்கின்றோம், எல்லோருடைய உரிமையும் காப்பாற்றப்பட வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி , ஒரே கலாசாரம் என பன்மைத்தனத்தை அழிக்கக்கூடாது. அப்படியான ஒரு முயற்சிதான் தந்தை பெரியார் உணவகம் மீதான தாக்குதல்.

பெரியார் பெயரில் உணவகம் இருக்கக்கூடாது என்று எந்தச் சட்டம் இருக்கின்றது. இதே பெயரில் 10 உணவகங்களைத் திறக்க திராவிட இயக்கங்கள் துணை நிற்கும். அராஜகங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இது போன்ற எண்ணம் கூட யாருக்கும் வரக்கூடாது. எல்லோரும் அவரவர் சொந்த முயற்சியில், அனைத்துக்கும் அப்பாற்பட்டவர் என்ற முறையில் பெரியார் பெயரை வைக்கலாம்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மத்திய, மாநில அரசின் முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்... இதோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.