கரோனா கரையேறும் நேரத்தில் கவனக்குறைவு கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!

author img

By

Published : May 14, 2022, 12:08 PM IST

கரோனா கரை சேரும் நேரத்தில் கவனக்குறைவு கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!

கோயம்புத்தூர் அரசு மருத்துவனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கரோனா கரை சேரும் நேரத்தில் கவனக்குறைவு கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அந்த மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தைப் பார்வையிட்டார். மேலும் புதிய கரோனா அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய நோய் பிரிவு ஆகிய பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவக் குழுவினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ”தமிழக முதலமைச்சர் சுகாதாரத் துறைக்கு என 17 தலைப்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்களை மேம்படுத்த 208 நல்வாழ்வு மையங்களையும் அறிவித்துள்ளார். கரோனா காலத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்தால் கூட மருத்துவ கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது நமக்கு பாடமாக உள்ளது.

ஜெய்க்கா திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 12 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு, குடல்நோய் துறை, நரம்பியல் துறை, எலும்பியல் துறை போன்ற துறைகள் பல்வேறு வசதிகளுடன் தயாராகிவருகிறது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் 32 ஹைபிரீட் அவசர சிகிச்சை படுக்கைகளின் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதனை நாங்கள் தற்போது பார்வையிட்டோம்.

தடுப்பூசி செலுத்தவில்லை: அதேநேரம், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 100 க்கும் கீழே பதிவாகி வருகிறது. ஆனால், கரோனா கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கரோனாவின் மூன்று அலைகளைத் தாண்டி விட்டோம். அதற்காக நான்காவது அலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது. மேலும் வெளிநாட்டில் இன்னும் கரோனாவின் தாக்கம் ஓயவில்லை. டெல்லியில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஐஐடி, சத்யசாய் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் அதிகரித்த பாதிப்பை குறைத்துள்ளோம்.

இவ்வாறான இவை இரண்டும் நமக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கவனக்குறைவாக இருக்க கூடாது என்பதை தெரிவிக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தமிழ்நாட்டில் 19 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 94 விழுக்காட்டை எட்ட உள்ளோம். இருந்தாலும் 2 வது தவணை எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் 1.29 கோடி பேரும், முதல் தவணையை 45 லட்சம் பேரும் இன்னும் செலுத்துக்கொள்ளவில்லை. பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்களும் 10 லட்சம் பேர் உள்ளனர்.

ஷவர்மா விவகாரம்: சமீபத்தில் எழுந்த ஷவர்மா விவகாரத்தில் நன்றாக சமைத்த எந்த உணவையும் தடை செய்ய முடியாது. பழங்கள் வாங்கும்பொழுது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான முறையில் பழங்களை பழுக்க வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேரளாவில் தக்காளி காய்ச்சல் குறித்து அரசின் செயலாளரிடம் இன்று பேசினோம். இது சாதாரண நோய். இதைக் கரோனா போல பீதியைக் கிளப்ப வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் இந்த தக்காளி காய்ச்சல் பாதிப்பு இல்லை.

இருப்பினும், தமிழ்நாட்டின் 13 எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு திட்டம் உள்ளது. மூன்றாவது அலையில் எளிதாக வெளிவந்ததற்கு காரணம், தடுப்பூசி செலுத்திக் கொண்டது மட்டுமே. ஊட்டி பழங்குடியினர் 100 விழுக்காடு அளவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி விட்டனர்” எனக் கூறினார்.

தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கொடுத்ததற்கு பட்டியலின மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு, குறைந்தபட்ச ஊதியம் தவறுதலாக கொடுக்கப்பட்டால் சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இதை ஆட்சியர் முடிவு செய்யக் கூடியது எனத் தெரிவித்தவர், அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லையா? அழையுங்கள் 14417

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.