Covai NIA Raid ஏன் நடந்தது..? பெண் கவுன்சிலரின் கணவர் அளித்த விளக்கம்!
Published: Sep 16, 2023, 1:59 PM


Covai NIA Raid ஏன் நடந்தது..? பெண் கவுன்சிலரின் கணவர் அளித்த விளக்கம்!
Published: Sep 16, 2023, 1:59 PM

NIA raids 30 locations on Kovai car blast incident: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நபருக்குத் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்றது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய திமுக கவுன்சிலரின் கணவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கோயம்புத்தூர்: கோவை உக்கடம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ (NIA) அதிகாரிகள் ஒரே நேரத்தில் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனையை தொடங்கினர்.
மேலும் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் ஜமேஷா முபினுடன் படித்த சந்தேகப்படும்படியான 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள திமுக பிரமுகர் தமிமுன் அன்சாரி, திமுகவை சேர்ந்த கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் முபசீரா, ஜிஎம் நகரில் உள்ள அபுதாஹிர், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சோஹைல், கரும்புக்கடை பகுதியில் உள்ள மன்சூர் உள்ளிட்ட நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சுமார் 3 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கோவை உக்கடம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள திமுக கவுன்சிலர் முபசீரா வீட்டில் நடைப்பெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றது. தற்போது திமுக கவுன்சிலர் முபஷீரா கணவர் ஆரிஃப் ஆகியோர் என்ஐஏ சோதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது திமுக கவுன்சிலரின் முபசீராவின் கணவர் ஆரிஃப் கூறியதாவது, "கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலியின் காய்கறி கடைக்கு அருகே தான் என் கடை உள்ளது. அதன் அடிப்படையில் என்னிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அரபிக் கல்லூரிக்குச் சென்றீர்களா? என விசாரித்தனர்.
நான் சென்றது இல்லை எனக் கூறினேன். ஒரு ஒன்றரை ஆண்டுகளாகத் தான் சனோஃபர் அலியை எனக்குத் தெரியும். அவர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்த கடைக்குப் பக்கத்துக் கடை என்ற அடிப்படையில் விசாரித்து விட்டு கிளம்பினர். ஒரு சில இடங்களுக்குச் சென்று வந்துள்ளீர்களா? எனக் கேட்டனர்.
மேலும் 5 அதிகாரிகள் வந்து இருந்தனர். என்னிடம், அவர்கள் என்ன என்ன வியாபாரம் செய்தனர்?, சனோஃபர் எப்படித் தெரியும்? என்று மட்டுமே கேட்டனர். அதிகாரிகள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தேன். எனக்கும் அரபிக் கல்லூரிக்கும் எந்த சம்பந்தம் இல்லை. மேலும் என் மனைவியிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை" எனத் தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் தமீமுன் அன்சாரி கூறுகையில், "அதிகாலை முதல் சுமார் 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். என்னிடம் 2 செல்போன்களை வாங்கி சென்று உள்ளனர். அரபிக் வகுப்பிற்குச் சென்று உள்ளீர்களா எனக் கேட்டு விசாரணை நடத்தினர்.
எனது அம்மா வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்து சோதனை நடத்தினர். மேலும் என்னை செல்போன் மூலம் அழைப்பு விடுத்து இங்கு வரவழைத்தனர். நான் தற்போது, பொது வாழ்க்கையில் உள்ளேன். எந்த குற்றப் பின்னணிகளுக்கும் செல்வதில்லை" எனறு தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
