கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

author img

By

Published : Sep 24, 2021, 11:24 AM IST

கோவை

கரோனா பரவல் கோவை மாவட்டத்தில் குறைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், சந்தை, பெரிய துணிக் கடைகள், நகைக் கடைகள், பொழுதுபோக்குக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை செயல்பட அனுமதி ரத்துசெய்யப்பட்டிருந்தன.

இதனிடையே கோவையில் தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை 80 விழுக்காடு மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. அதேசமயம் அரசு அறிவித்த அனைத்துத் தளர்வுகளுடன்கூடிய கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்படி வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், துணிக் கடைகள், நகைக் கடைகள், சந்தை, பொழுதுபோக்குக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும்.

திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும். கேரள-தமிழ்நாடு எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடிகள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

பள்ளி, கல்லூரிகளில் கேரள மாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சந்தைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதைச் சார் ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை மாநகராட்சியில் 305 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.