பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு மாணவர்களைப் பாதிக்குமா?

author img

By

Published : Jan 11, 2022, 4:37 PM IST

தேர்வுகள் ஒத்திவைப்பு மாணவர்களை பாதிக்குமா?

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்கலைக் கழகங்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் வழி தேர்வு முறையா அல்லது நேரடி தேர்வு முறையா? என அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று (ஜனவரி 10) அறிவித்தார். 2020, 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டன. இதனால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுகிறதா? என்பதில் சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்த பின்னர், நேரடி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து கல்லூரி மாணவர்களுக்குத் தேர்விற்குப் படிப்பதற்கான விடுமுறையை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

எப்போது வகுப்புகள் தொடங்கும்

இதனால் ஜனவரி மாதம் 21ஆம் தேதிமுதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் எப்போது வகுப்புகள் தொடங்கும் என்பதும் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதும் தெரியாமல் உள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு மாணவர்களைப் பாதிக்குமா?

இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

நடப்பு பருவத்தேர்வை பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடத்தினால், அடுத்தப் பருவத்தேர்வை ஆகஸ்ட், செப்டம்பர் மாதம்தான் நடத்த முடியும். வெளிநாடுகளில் ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு விடும். மேலும் இறுதிப் பருவத்தில் படிக்கும் மாணவர்கள் வேலைக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்படும்.

தேர்வுகள் நேரடியாக நடக்குமா?

தேர்வுகள் காலதாமதம் ஆகும்போது மாணவர்கள் சோர்வு அடையவும் வாய்ப்புள்ளது. தேர்வுகள் நேரடியாக நடக்குமா? ஆன்லைனில் நடக்குமா? என்பதிலும் குழப்பம் ஏற்படும்.

தேர்வுகள் வழக்கமாக நடத்தப்படும் காலகட்டத்தை கடந்து நடத்துகின்றபோது நம் நாட்டில் நடைபெறும் GATE, CAT போன்ற நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தேர்வுகள் ஒத்திவைப்பு மாணவர்களை பாதிக்குமா?

ஆன்லைன் வழி தேர்வு

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் காந்திராஜன் கூறும்போது, "கரோனா தொற்று பரவிவருவதால் மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்துள்ளதை வரவேற்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் வழி தேர்வு மாணவர்களுடைய கல்விச் சூழலை வெகுவாகப் பாதித்துள்ளது. எனவே மாணவர்களுக்கு நேரடி வழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்.

மாணவர்களுக்குத் தடுப்பூசி

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடப்புப் பருவத்திற்கான பாடத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து கற்றல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், இரண்டாம் பருவத்திற்கான பாடத்திட்டங்களை நடத்த வேண்டும். 10 முதல் 12ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நடைபெறுவதுபோல், கல்லூரி மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

அரசு செய்முறைத் தேர்வுகளை நடத்தலாம் என அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு கல்லூரிகளில் செய்முறைத் தேர்வு நடத்தலாம். கல்லூரிகளில் 90 விழுக்காடு மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். தடுப்பூசி செலுத்தாத மாணவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.