24 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Oct 13, 2021, 3:12 PM IST

கனமழை

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக். 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில், எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (அக். 13) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 14: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

அக்டோபர் 15: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும்; ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 16: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான், அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 16 வரை:

தென் மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களில் மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.