2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற ''நான் குற்றம் சாட்டுகிறேன்'' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அதில் மத்திய, மாநில அரசுகளே இலங்கைத் தமிழர் விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும், வைகோ மீது தேச துரோகம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 2009 ஜூலை மாதத்தில் இருந்து சுமார் 146 நாட்களுக்குப் பிறகு என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ எதிராகவும், நாட்டிற்கு எதிராக கலவரத்தையோ? மாநிலத்தை பிரிக்கும் வகையிலோ பேசினால் மட்டுமே தேச துரோக வழக்கை பதிவு செய்ய முடியும், ஆனால் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராக நான் பேசியதாக இல்லை என்பதை சாட்சிகள் விசாரணையில் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ள குறைபாடுகள் அடிப்படையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல், சிறப்பு நீதிமன்றம் தனக்கு வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வைகோ தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.